அக்கால உலகின் செல்வமிக்க பகுதிகளில் ஒன்றாக விஜயநகரப் பேரரசு விளங்கியது என்ற செய்தியை அயல்நாட்டுப் பயணிகளின் குறிப்புகள் தெரிவிக்கின்றன. மக்களின் முக்கிய தொழில் வேளாண்மை. நீர்ப்பாசன வசதிகளை செய்த கொடுத்து விஜயநகர ஆட்சியாளர்கள் வேளாண்மை வளர்ச்சிக்கு மேலும் ஊக்கமளித்தனர். புதிய ஏரிகள் வெட்டப்பட்டன. துங்கபத்திரா போன்ற நதிகளின் குறுக்கே தடுப்பு அணைகள் கட்டப்பட்டன. கால்வாய்கள் அமைக்கப்பட்டதைப் பற்றி நூனிஸ் கூறியுள்ளார்.
பல்வேறு தொழில்களும் சிறந்து விளங்கின. அவை ஒவ்வொன்றுக்கும் கழகங்கள் இருந்தன. உலோகத்தொழில் செய்வோரும் பிற கைவினைஞர்களும் அக்காலத்தில் தழைத்தோங்கினர். கர்நூல், அனந்தபூர் மாவட்டங்களில் வைரச்சுரங்கங்கள் இருந்தன. விஜயநகரம் ஒரு புகழ்மிக்க வர்த்தக மையமாகவும் விளங்கியது. முக்கிய தங்க நாணயம் வராகன் என்பதாகும். ஆனால், எடைகளும், அளவைகளும் இடத்துக்கு இடம் மாறுபட்டிருந்தன. உள்நாட்டு, அயல்நாட்டு வர்த்தகம் பெருகியதால் நாட்டில் பொதுவாக செல்வ செழிப்பு காணப்பட்டது.
மலபார் கடற்கரையில் பல துறைமுகங்கள் இருந்தன. அவற்றில் குறிப்பிடத்தக்கது கண்ணணூர் துறைமுகமாகும். அராபியா, பாரசீகம், தென் ஆப்ரிக்கா, போர்ச்சுகல் போன்ற மேலை நாடுகளுடனும் வாணிகத்தொடர்பு நிலவியது. பருத்தி மற்றும் பட்டுத் துணிகள், நறுமணப் பொருட்கள், அரிசி, வெடியுப்பு, சர்க்கரை போன்றவை முக்கிய ஏற்றுமதிப் பொருட்கள். குதிரைகள், முத்துக்கள், செம்பு, பவழம், பாதரசம், சீனத்துப்பட்டு, வெல்வெட்துணிகள் போன்றவை இறக்குமதி செய்யப்பட்டன. கப்பல் கட்டும் தொழிலும் வளர்ச்சியடைந்தது.