தென்னிந்தியாவில் பெரும்பாலான கோயில்களை அவர் செப்பனிட்டார். விஜயநகரத்தில் விட்டலசுவாமி மற்றும் ஹசரராமசுவாமி ஆலயங்களையும் அவர் எழுப்பினார். தனது பட்டத்தரசி நாகலாதேவியின் நினைவாக அவர் நாகலாபுரம் எனற புதிய நகரை நிர்மாணித்தார். மேலும் ஏராளமான ராயகோபுரங்களையும் அவர் கட்டுவித்தார்.
கிருஷ்ணதேவராயரின் மறைவுக்குப்பிறகு அச்சுததேவர், வெங்கடர் ஆகியோர் அரியணையேறினர்.
அச்சுததேவர்
ராமராயரின் ஆட்சிக்காலத்தில், பீஜப்பூர், அகமதுநகர், கோல்கொண்டா, பீடார் ஆகிய அரசுகளின் கூட்டுப்படைகள் 1565 ஆண்டு தலைக்கோட்டைப்போரில் அவரை முறியடித்தன. அப்போர் ராக்ஷவதாங்கடி என்றும் அழைக்கப்படுகிறது. ராமராயர் கைப்பற்றப்பட்டு கொல்லப்பட்டார். விஜயநகரம் அழிக்கப்பட்டது. விஜயநகரப் பேரரசுக்கு சாவுமணி அடித்த போராக இது கருதப்படுகிறது. இருப்பினும், விஜயநகர அரசு ஆரவீடு மரபினரின் ஆட்சியில் அடுத்த நூறாண்டுகள் நிலைத்திருந்தது. திருமலா, ஸ்ரீரங்கா, இரண்டாம் வெங்கடர் ஆகியோர் அம்மரபின் முக்கிய அரசர்கள். விஜய நகர அரசின் கடைசி அரசர் இரண்டாம் ஸ்ரீரங்கர்.
ஆட்சி முறை
விஜயநகரப் பேரரசின் கீழ் ஆட்சித்துறை நன்கு சீரமைக்கப் பட்டிருந்தது. நிர்வாகம், நீதி, சட்டம் ஆகிய விவகாரங்களில் அரசர் முழு அதிகாரம் பெற்று விளங்கினார். பரம்பரை வாரிசுரிமை வழங்கத்திலிருந்தது. சிலசமயம் அரியணையை கைப்பற்றிக் கொள்ளும் நிகழ்ச்சியும் நடந்தது. சாளுவ நரசிம்மர் சங்கம மரபை முடித்துவிட்டு ஆட்சியைக் கைப்பற்றினார் என்பதை ஏற்கனவே கண்டோம். அரசருக்கு அன்றாட ஆட்சியில் உதவுவதற்காக அமைச்சரவையும் இருந்தது.