இந்தியத் துணைக் கண்டத்தின் பல்வேறு பகுதிகளில் பழைய கற்கால மனிதர்கள் வாழ்ந்த இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவ்விடங்கள் பெரும்பாலும் நீர்நிலைகளுக்கு அருகாமையிலேயே உள்ளன. பழைய கற்கால மக்கள் வசித்த பாறை இடுக்குகளும், குகைகளும் துணைக் கண்டம் முழுவதும் பரவிக் கிடக்கின்றன. சில இடங்களில் அவர்கள் இலைகளால் வேயப்பட்ட குடிசைகளிலும் வாழ்ந்தனர்.
இந்தியாவில் காணப்படும் பழைய கற்கால மக்கள் வாழ்ந்த இடங்கள் வருமாறு :
அ. வடமேற்கு இந்தியாவில் சோன் பள்ளத்தாக்கு மற்றும் பொட்வார் பீடபூமி
ஆ. வடஇந்தியாவில் சிவாலிக் குன்றுகள்
இ. மத்திய பிரதேசத்தில் பிம்பேட்கா.
ஈ. நர்மதைப் பள்ளத்தாக்கில் ஆதம்கார் குன்று
உ. ஆந்திரப் பிரதேசத்தில் கர்நூல்
ஊ. சென்னைக்கு அருகிலுள்ள அத்திரம்பாக்கம்
பழைய கற்கால மக்கள்
பழைய கற்காலத்தில் விலங்குகளை வேட்டையாடியும், உண்ணக் கூடிய தாவரங்கள் மற்றும் கிழங்குகளை சேகரித்தும் மக்கள் தங்களது உணவைத் தேடிக் கொண்டனர். எனவே, இவர்களை, 'உணவை சேகரிப்போர்' என்று அழைக்கின்றனர். விலங்குகளை வேட்டையாடுவதற்கு கற்கருவிகளையே இந்த மக்கள் பயன்படுத்தினர். கையளவு கற்கருவி மற்றும் உடைந்த கூழாங்கற்களே இவர்களது ஆயுதங்களாகும். கற்கருவிகள் கெட்டியான குவார்ட்சைட் எனப்படும் பாறைக்கற்களாலானவை. ஆற்றுப் படுகைகளில் பெரிய கூழாங்கற்கள் கிடைத்தன. உருவத்தில் பெரிய
பழைய கற்கால கருவிகள்
விலங்குகளை வேட்டையாடுவதற்கு பெரிய கற்கோடரிகளை இவர்கள் பயன்படுத்தியிருக்கவேண்டும். மேலும், குழுக்களாக ஒன்றிணைந்து பெரிய விலங்குகளை இவர்கள் வீழ்த்தியிருக்கவேண்டும். பழைய கற்கால மக்களின் மொழி மற்றும் தகவல் பரிமாற்றமுறை குறித்து எதுவும் தெரியவில்லை. காலப்போக்கில் இவர்களது வாழ்க்கை முறையில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. விலங்குகளை வளர்க்கவும், கரடுமுரடாக மட்பாண்டங்களை உருவாக்கவும், ஒருசில தாவரங்களை வளர்க்கவும் இவர்கள் முயற்சிகளை மேற்கொண்டனர். பிம்மிட்கா போன்ற ஒருசில பழைய கற்கால இடங்களில் இவர்களது ஓவியங்களும் காணப்படுகின்றன. பழைய கற்காலம் என்பது கி.மு. 10,000 ஆண்டுக்கு முற்பட்டதாகும்.