மனித நாகரிகத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை புதிய கற்காலத்தில்தான் காணமுடிகிறது. புதிய கற்காலம் சுமார் கி.மு. 6000 முதல் கி. மு. 4000 ஆண்டுகளுக்கு இடைப்பட்டதாகும். இந்தியாவின் பல பகுதிகளில் புதிய கற்காலப் பொருட்கள் கிடைத்துள்ளன. காஷ்மீர் பள்ளத்தாக்கு பீகாரில் சிராண்ட், உத்திரப் பிரதேசத்தில் பீலான் சமவெளி, தக்காணத்தில் பல இடங்கள் ஆகியனவும் இதிலடங்கும். தென்னிந்தியாவில் பல புதிய கற்கால வசிப்பிடங்களில் அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளன . கர்நாடகத்தில் மாஸ்கி, பிரம்மகிரி, ஹல்லூர், கோடேகல், தமிழ்நாட்டில் பையம்பள்ளி மற்றும் ஆந்திரப்பிரதேசத்தில் உட்னூர் ஆகிய இடங்கள் அவற்றில் குறிப்பிடத்தக்கவை.
புதிய கற்கால மக்கள்
வேளாண்மை, விலங்குகளை வளர்த்தல், கற்கருவிகளை பளபளப்பாக்குதல், மட்பாண்டம் செய்தல் போன்றவை புதிய கற்கால பண்பாட்டின் சிறப்புக் கூறுகளாகும். தாவரங்களைப் பயிரிடத் தொடங்கியதாலும் பிராணிகளை வளர்த்தமையாலும் ஓரிடத்தில் தங்கிவாழ முற்பட்ட புதிய கற்கால மக்கள் கிராம சமுதாயங்கள் உருவாகவும் வழி வகுத்தனர். கருவிகனள உருவாக்குவதிலும் மனிதனுக்குத் தேவையான சாதனங்களைப் படைப்பதிலும் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட மாறுதல்களை இக்காலத்தில் தெளிவாகக் காணமுடிகிறது. கற்கருவிகள் நன்கு பளபளப்பாக தீட்டப்பட்டன. வேட்டையாடுவதற்கும் மரங்களை வெட்டுவதற்கும் பளபளப்பான கூரிய கற்கோடரிகள் பெரிதும் பயனுடையதாக இருந்தன. புல்லால் ஆன குடிசைகளுக்குப்பதிலாக, களிமண் கற்களாலான குடிசைகள் அமைக்கப்பட்டன. மட்பாண்டங்கள் செய்வதற்கு சக்கரம் பயன்படுத்தப்பட்டது. சமைப்பதற்கும், உணவு தானியங்களை சேமித்து வைக்கவும் மட்பாண்டங்கள் பயன்பட்டன. இறந்தோரை அடக்கம்
புதிய கற்கால மக்கள்
செய்வதற்கு பெரிய மண்பாண்ட தாழிகள் பயன்படுத்தப்பட்டன. சாகுபடி முறைகளிலும் முன்னேற்றம் காணப்பட்டது. பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு இடங்களில், கோதுமை, பார்லி, நெல், தினை போன்றவை பயிரிடப்பட்டன. கிழக்கிந்தியாவில் நெல் அதிகம் பயிரிடப்பட்டது. செம்மறியாடுகள், ஆடுகள், மாடுகள் வளர்ப்பு பரவலாகக் காணப்பட்டது. பயிரிடுவதற்கும், போக்குவரத்துக்கும் கால்நடைகள் பயன்பட்டன. பருத்தி மற்றும் கம்பளி ஆடைகளை புதிய கற்கால மக்கள் அணிந்தனர்.