விருதுநகரைச் சேர்ந்த கு. காமராஜ் மற்றொரு விடுதலை வீரர் ஆவார். 1924ல் வைக்கம் சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டதின் மூலம் அவர் தேசிய இயக்கத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். 1929ல் ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவராகவும், பொருளாளராகவும் அவர் விளங்கினார். ஆரம்பத்திலிருந்தே காமராஜர் மக்கள் தலைவராகத் திகழ்ந்தார். எளிமையான நடையில் அவர் பேசுவார். நுண்ணறிவும், செயல்திறனும் மிக்கவராக அவர் திகழ்ந்தார்.
கு. காமராஜ்
தமிழ்நாட்டின் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று மக்களின் பல்வேறு பிரச்சினைகளை அவர் புரிந்து கொண்டார். தமிழ்நாட்டிலிருந்த சாமானியர்களில் ஒருவராக அவர் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டார். தமிழ்நாட்டின் கிராமங்களுக்கு காங்கிரஸ் இயக்கத்தை கொண்டு சென்றவர் காமராஜ் என்று கூறலாம்.
உப்பு சத்தியாகிரகம்
சி. ராஜகோபாலாச்சாரி
சட்டமறுப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக காந்தி உப்பு சத்தியாகிரகத்தை தொடங்கினார். 1930ல் அவர் தண்டி யாத்திரையை மேற்கொண்டார். 1930 ஏப்ரல் மாதத்தில் சி. ராஜகோபாலாச்சாரி தமிழ்நாடு காங்கிரசின் தலைவராக தமிழ்நாட்டில் உப்பு சத்தியாக்கிரகத்தை மேற்கொள்ளும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. வரலாற்றுப் புகழ்பெற்ற வேதாரண்யம் உப்பு சத்தியாக் கிரக நடைப்பயணத்தை அவர் மேற்கொண்டார். திருச்சியிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்த வேதாரண்யம் கடற்கரைக்கு நடைப்பயணம் மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டு தமிழ்ப் புத்தாண்டு அன்று (ஏப்ரல் 15) பயணம் தொடங்கப்பட்டது.
திருப்பூர் குமரன்
1930 ஏப்ரல் 26 ஆம் நாள் இப்பயணம் வேதாரண்யத்தில் முடிவடைந்தது. இரண்டு நாட்கள் கழித்து உப்புச் சட்டங்களை மீறியதற்காக ராஜகோபாலாச்சாரி கைது செய்யப்பட்டார். வி.எஸ்.எஸ். ராஜன் சர்தார் வேதரத்தினம் பிள்ளை சி. சுவாமிநாத செட்டி மற்றும் கே. சந்தானம் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் வேதாரண்யம் உப்பு சத்தியக்கிரகத்தில் பங்குபெற்றனர்.
கொடியேந்தி போராட்டம் நடத்திய திருப்பூர் குமரன் தடியடிக்கு ஆளானார். கொடியை கையில் பிடித்து போராடிய அந்த மாவீரன் கொடி காத்த குமரன் என்று அழைக்கப்பட்டார். இவரது நினைவைப் போற்றி இந்திய அரசு அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது.
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் எழுச்சிமிக்க பாடல்களால் தேசிய இயக்கம் மேலும் வலிமை பெற்றது. விடுதலை இயக்கத்தில் காந்திய நெறிகள் பின்பற்றப்பட வேண்டிய அவசியத்தை அவரது பாடல்கள் எடுத்துக் கூறின. "கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது " என்று அவர் பாடினார். பிரிட்டிஷாருக்கு எதிரான அகிம்சைப் போராட்டத்தின் கொள்கையை விளக்குவதாக இந்த வரிகள் அமைந்தன.