1916 முதல் 1918 ஆம் ஆண்டு வரை சென்னையில் அன்னிபெசன்ட் அம்மையார் தன்னாட்சி இயக்கத்தை தொடங்கி நடத்தினார். 1915 செப்டம்பர் மாதத்திலேயே 'நியூ இந்தியா' என்ற தமது இதழில் அன்னிபெசன்ட் தன்னாட்சி இயக்கம் தொடங்கப் போவதற்கான முடிவை அறிவித்திருந்தார்.
அன்னிபெசன்ட்
1915 டிசம்பரில் பம்பாய் காங்கிரஸ் மாநாட்டில் அதற்கான காங்கிரஸ் கட்சியின் ஒத்துழைப்பையும் கோரினார். திலகரும் இவரது முயற்சிக்கு ஆதரவு தெரிவித்தார். முதல் உலகப்போர் காலத்தில் தன்னாட்சி இயக்கம் மிகவும் தீவிரமாக நடைபெற்றது.
ஒத்துழையாமை இயக்கம்
எஸ். சத்தியமூர்த்தி
1921 முதல் 1923 ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் ஒத்துழையாமை இயக்கமும் தீவிரமாக நடைபெற்றது. அந்நியரின் விதிமுறைக்களுக்கு எதிரான போராட்டங்கள் 1921 மார்ச்சில் தொடங்கின. மாகாணத்தின் பல பகுதிகளிலும் மது அருந்துவதற்கு எதிரான இயக்கங்கள் 1921 - 22 ஆம் ஆண்டுகளில் நடைபெற்றன. குறிப்பாக மது அருந்துவதற்கு எதிரான போராட்டம் மதுரையில் தீவிரமாக நடைபெற்றது. பொதுவாகவே, தமிழ்நாடு முழுவதும் ஒத்துழையாமை இயக்கம் பரவலாக நடைபெற்றது. இதன் முக்கிய தலைவர்களாக சி. ராஜகோபாலாச்சாரி, எஸ். சத்தியமூர்த்தி, ஈ.வெ. ராமசாமி நாயக்கர் போன்றோர் செயல்பட்டனர். அந்த சமயத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக ஈ.வெ,ராமசாமி நாயக்கர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. காந்தியின் செயல்திட்டங்களில் சட்டசபை புறக்கணிப்பே முக்கியமானது என்று சி. ராஜகோபாலாச்சாரி வலியுறுத்தினார். ஆனால், கஸ்தூரிரங்க அய்யங்கார், சீனுவாச அய்யங்கார், வரதராஜுலு நாயுடு, விஜயராகவாச்சாரி போன்ற தலைவர்கள் இதனை ஏற்கவில்லை.
இதற்கிடையில், பெரியார் ஈ.வெ.ரா. கேரளத்தில் வழக்கத்திலிருந்த சமூகப் பாகுபாட்டைக் கண்டித்து வைக்கம் சத்யாக்கிரகப் போராட்டத்தை தொடங்கினார்.
காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான வி.வி.எஸ். அய்யர் நடத்திவந்த சேரன் மாதேவி குருகுலத்தில் சமூகப்பாகுபாடு நிலவுவதைக் கண்டித்த பெரியார் காங்கிரசிலிருந்து வெளியேறினார். புதுக்கோட்டையைச் சேர்ந்த எஸ். சத்தியமூர்த்தியும் விடுதலைப்போராட்ட வீரர்களில் முக்கியமானவர். 1929ல் சைமன் குழு தமிழ்நாட்டுக்கு வந்தபோது சைமன் குழு எதிர்ப்பு போராட்டத்திற்கு சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார்.