கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் முடிவில் அப்பாசீதுகளின் அரசு வீழ்ச்சியடைந்தது. துருக்கிய ஆட்சியாளர்கள் சுதந்திர அரசுகளை ஏற்படுத்திக் கொண்டனர். காலிப் பெயரளவுக்கே ஆதிக்கம் செலுத்தினார். அத்தகைய ஆட்சியாளர்களில் ஒருவர்தான் கஜினியைத் தலைநகராக் கொண்டு ஆட்சிபுரிந்த அலப்டிஜின். அடுத்து ஆட்சிக்கு வந்த அவரது மருமகன் சபுக்டிஜின் வடமேற்கு வழியாக, இந்தியாவைக் கைப்பற்ற விரும்பினார். ஜெயபாலரிடமிருந்து பெஷாவரை அவர் கைப்பற்றினார். ஆனால் அவரது படையெடுப்புகள் நீடித்த விளைவுகளை ஏற்படுத்தவில்லை. அடுத்து ஆட்சிக்கு வந்தவர் முகமது.
கஜினி முகமது (கி.பி. 997 - 1030)
கஜினி முகமது
கஜினி முகமது இந்தியாவின் மீது பதினேழு முறை படையெடுத்து வந்தார் எனக் கூறப்படுகிறது. அக்காலத்தில் வட இந்தியாவில் பல இந்து அரசுகள் ஆட்சியிலிருந்தன. இந்தியாவின் எல்லைப்புறத்தில், பஞ்சாப் முதல் காபூல் வரையிலான பகுதியில் இந்து சாஹி அரசு இருந்தது. கனோஜ், குஜராத், காஷ்மீர், நேபாளம், மாளவம், பண்டேல்கண்ட் போன்றவை வடஇந்தியாவிலிருந்த முக்கிய அரசுகள். முகமதுவின் தொடக்கப் படையெடுப்பை இந்து சாஹி அரசர் ஜெயபாலர் எதிர்கொண்டார். 1001ல் ஜெயபாலர் முறியடிக்கப்பட்டார். தோல்வியடைந்த ஜெயபாலர் தீயில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார். அடுத்து ஆட்சிக்கு வந்த அனந்தபாலர் முகமதுவை எதிர்த்துப் போரிட்டார். ஆனால் 1008 ஆம் ஆண்டு பெஷாவருக்கு அருகிலிருந்த இந்து சாஹி அரசின் தலைநகரான வைஹிந்த் என்ற இடத்தில் நடைப்பெற்ற போரில் அவர் தோற்றுப் போனார். இப்போரில் அனந்தபாலருக்கு ஆதரவாக கனோஜ், ராஜஸ்தான் ஆட்சியாளர்கள் இருந்தனர். வைஹிந்த் வெற்றிக்குப் பிறகு முகமது பஞ்சாபின் பெரும் பகுதியை தமது ஆட்சியின்கீழ் கொண்டு வந்தார்.
சோமநாதபுரத்தின் இடிபாடுகள்
அதற்குப்பின் முகமது இந்தியா மீது மேற்கொண்ட படையெடுப்புகள் யாவும் செல்வம் நிறைந்த நகரங்களையும் கோயில்களையும் தாக்கி கொள்ளையடிப்பதையே நோக்கமாகக் கொண்டிருந்தன. 1018 ஆம் ஆண்டு முகமது மதுரா நகரைச் சூறையாடினார். கனோஜ் மீதும் தாக்குதல் தொடுத்தார். கனோஜை விட்டு ஓடிய அதன் அரசர் ராஜ்யபாலர் விரைவில் இறந்தார். பெருத்த கொள்ளைப் பொருளுடன் கலிஞ்சார் வழியாக முகமது திரும்பிச் சென்றார். அவரது அடுத்த படையெடுப்பு குஜராத்திற்கு எதிரானதாகும். 1024 ஆம் ஆண்டு முல்தானிலிருந்து புறப்பட்ட முகமது ராஜபுதனத்தைக் கடந்து சோலங்கி அரசர் முதலாம் பீமதேவனை முறியடித்தார். அன்ஹில்வாத் சூறையாடப்பட்டது. பின்னர் சோமநாதபுரத்தின் புகழ்மிக்க ஆலயம் தாக்கப்பட்டது, சிந்துப்பாலைவனம் வழியாக முகமது நாடு திரும்பினார். இதுவே அவரது கடைசிப் படையெடுப்பாகும். கி.பி. 1030 ஆம் ஆண்டு முகமது இறந்தார்.