தொடர்ந்த போர்களின் காரணமாக ரஜபுத்திரர்கள் வலிமையிழந்தன. மேலும், அவர்கள் பொது எதிரிக்கு எதிராக ஒருபோதும் அணிவகுத்து நிற்கவில்லை. அரசியல் தொலைநோக்கும் அவர்களிடம் காணப்படவில்லை. உட்பகை மேலோங்கியிருந்தமையால் அவர்கள் முஸ்லிம் படையெடுப்பாளர்களுக்கு எதிராக ஒன்று சேர்ந்து போரிடத் தவறினர்.
சிந்துவை அராபியர் கைப்பற்றுதல் (கி.பி. 712)
அரேபியாவிலுள்ள மெக்கா நகரில் பிறந்தது இஸ்லாம். நிறுவியவர் முகமது நபி. ஆனால், மெக்கா நகரைச் சேர்ந்த செல்வந்தர்கள் அவரது போதனைகளை எதிர்த்தனர். எனவே, அவர் கி.பி. 622 ஆம் ஆண்டு மெதினாவுக்குச் சென்றார். அந்த ஆண்டிலிருந்துதான் முஸ்லிம் சகாப்தமான ஹிஜிரா தொடங்குகிறது. முஸ்லிம் நாட்காட்டியும் தொடங்குகிறது. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு முகமது நபி தனது சீடர்களுடன் மெக்காவிற்குத் திரும்பினார். கி.பி. 632ல் அவர் மறைந்தார்.
முகமது பின் காசிம்
& அவரது படைகள்
முகமது நபியின் சீடர்கள் காலிப்புக்களின் பேரரசை ஏற்படுத்தினர். உமையதுகளும், அப்பாசிதுகளும் காலிப்புகள் என அழைக்கப்பட்டனர். அவர்கள் படையெடுப்புகள் மூலம் தங்களது ஆட்சிப் பகுதியை விரிவுபடுத்தி இஸ்லாமிய சமயத்தைப் பரப்பி வந்தனர். கி.பி. 712 ஆம் ஆண்டு உமையதுகள் அரசின் படைத்தலைவரான முகமது பின் காசிம் சிந்துப் பகுதியின்மீது படையெடுத்தார். சிந்து அரசின் ஆட்சியாளரான தாஹிர் என்பவருடன் கடும் போரிட்டு அவரை தோற்கடித்துக் கொன்றார். சிந்துவின் தலைநகரம் அரோர் கைப்பற்றப்பட்டது. மேலும் முன்னேறிய காசிம் முல்தானைக் கைப்பற்றினார். சிந்துவில் ஆட்சிமுறையை காசிம் சீரமைத்தார். சிந்துவில் வாழ்ந்த இந்துக்களுக்கு 'சிம்மிக்கள்' என்றழைக்கப்படும் பாதுகாக்கப்படும் மக்கள் என்ற இரண்டாந்தர அந்தஸ்து வழங்கப்பட்டது. இருப்பினும் அம்மக்களின் அன்றாட வாழ்க்கையில் எவ்வித தனலயீடும் இல்லை. சொத்துகள் ஏதும் பறிமுதல் செய்யப்படவில்லை. பின்னர், காசிம் காலிப்பினால் திருப்பியழைக்கப்பட்டார்.
இருப்பினும், சிந்து அராபியரின் கட்டுப்பாட்டிலேயே தொடர்ந்து இருந்தது. மேற்கிந்தியாவில் வலிமையான பிரதிஹார அரசு ஆட்சி செய்து வந்தமையால் முஸ்லிம்களினால் இந்தியாவிற்குள் தங்களது ஆதிக்கத்தை விரிவு படுத்தமுடியவில்லை. அராபியர் சிந்துவைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, உடனடியாக முஸ்லிம் படையெடுப்புகள் ஏதும் நடைபெறவில்லை. எனினும் இந்தியப் பண்பாடு மேலை நாடுகளில் பரவுவதற்கு அது வழி வகுத்தது. பல அராபியப் பயணிகள் சிந்துவிற்கு வருகை புரிந்தனர். அவர்கள் மூலமாக இந்திய எண் முறை ஐரோப்பாவிற்கு சென்றது. அராபியப் பேரரசின் ஒரு பகுதியாக சிந்து விளங்கியதால், இந்தியாவின் அறிவுத் தொகுதி வெளிநாடுகளுக்கு வேகமாகப் பரவியது.