மிகவும் அவசர அவசரமாக நடைமுறைப்படுத்தப்பட்டதற்காக காரன் வாலிசின் நிலையான நிலவரித்திட்டம் பெரிதும் விமர்சிக்கப்பட்டது. நிலங்களை அளக்கவோ அல்லது அவற்றின் மதிப்பை ஆய்வு செய்யவோ எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்பது இத்திட்டத்தின் மிகப்பெரிய குறைபாடாகும். ஏற்கனவே வசூலிக்கப்பட்டு வந்த வரிகளின் அடிப்படையில் ஏறத்தாழ அரைகுறையாகவும் வரி மதிப்பீடு செய்யப்பட்டது. ஜமீன்தார்களும், உழவர்களும் இத்திட்டத்தினால் பாதிக்கப்பட்டனர். இத்திட்டத்தின்கீழ் நிர்ணயிக்கப்பட்ட வரித் தொகை மிகவும் அதிகமாக இருந்தமையால் பல ஜமீன்தார்கள் வரி கட்டத் தவறினர். அவர்களுடைப சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களது நிலை மோசமாகியது. அதே சமயம் பணவசதி மிக்க ஜமீன்தார்கள் ஆடம்பர வாழ்க்கை நடத்தினர், கிராமங்களைவிட்டு நகரங்களுக்கு குடிபெயர்ந்தனர். வரி வகுலிக்கும் பொறுப்பை தங்களது முகவர்களிடம் விட்டுச் சென்றதால், உழவர்களை அவர்கள் கசக்கிப் பிழிந்து சட்டத்துக்குப் புறம்பான வரிகளை அவர்களிடமிருந்து வசூலித்தனர். இதனால் குடியானவர்கள் பெரும் துன்பங்களை அனுபவித்தனர். காரன்வாலிஸ் கொண்டுவர எண்ணிய நட்புமிக்க நிலப்பண்ணை முறை தோல்வியடைந்தது என்றே கூறவேண்டும்.
ஜமீன்தாரி வர்க்கம் உழவர்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை என்று பேடன் பவுல் குறிப்பிடுகின்றார். தொடக்கத்தில், வணிகக் குழுவிற்கு நிதியளவில் பயன் கிடைத்த போதிலும் தொலைநோக்கில் வணிகக் குழுவிற்கு பெருத்த நட்டமே ஏற்பட்டது. நிலங்களில் உற்பத்தி பெருகினாலும்கூட நிலவரி ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுவிட்டதால் வருவாய் சொற்பமாகவே இருந்தது. பிரிட்டிஷாருக்கு முன்பு இருந்த முறைப்படி விளைச்சலில் ஒரு பங்கு நிலவரியாக நிர்ணயிக்கபட்டிருந்ததை நாம் இங்கே நினைவு கூறவேண்டும்.
இருப்பினும் வங்காள அரசுக்கும் ஜமீன்தார்களுக்கும் இத்திட்டம் ஒரு வரப்பிரசாதமாகவே அமைந்தது. சீரான வருமானம் கிடைத்ததால் வணிகக் குழுவின் அரசாங்கம் நிலையாக இயங்க முடிந்தது. ஜமீன்தார்கள் குத்தகைதாரர்களின் உழைப்பில் செல்வச் செழிப்பில் திளைத்தனர்.
இரயத்துவாரி முறை
சர் தாமஸ் மன்றோ
சென்னை, பீகார், பம்பாய், அஸ்ஸாம் பகுதிகளில் இரயத்துவாரி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. சர் தாமஸ் மன்றோ சென்னை மாகாணத்தில் இதனைக் கொண்டு வந்தார். இந்த முறையின்கீழ் குடியானவரே நிலத்தின் உடைமையாளராக ஏற்றுக்கொள்ளப்பட்டார். குடியானவருக்கும் அரசாங்கத்திற்கும் இடையே ஜமீன்தார் போல எந்தவொரு இடைத்தரகரும் இல்லை. குடியானவர் தொடர்ந்து வரிசெலுத்தும் காலம் வரை அவர் நிலத்திலிருந்து அப்புறப்படுத்தபடமாட்டார். மேலும், நிலவரி 20 முதல் 40 ஆண்டுகளுக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஒவ்வொரு குடியானவரும் அரசாங்கத்திற்கு தாமே நேரடியாக வரி செலுத்த வேண்டும் என்று விதிக்கப்பட்டது. இருப்பினும் இந்த திட்டமும் தோல்வியிலேயே முடிந்தது. ஒரு ஒழுங்கான முறையில் வரிவசூலிப்பது கடினமாக இருந்தது. வரி கட்டாவிட்டாலோ, தாமதமானாலோ, வருவாய் அதிகாரிகள் கடுமையான முறைகளைப் பயன்படுத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.