தனது கழுதைகளைத் தண்ணீர் அருந்த விட்டுத் தன்னுடைய தோளிலிருந்த பிரம்புக் கூடையைக் கீழே இறக்கத் துவங்கினாள் யுவதி. தன்னுடைய திரண்ட தோள்களால் அந்தச் சுமையைத் தாங்கி கீழே வைத்து அவளுக்கு உதவி செய்தான் வாலிபன். அவளுடைய நன்றியுணர்ச்சி ஒரு புன்னகையாக மலர்ந்தது.
“ரொம்ப வெப்பமாயிருக்கிறது.”
“வெப்பமில்லை. மலை ஏறிவந்ததால் இப்படி சிரமமாய்த்தானிருக்கும். சிறிது இளைப்பாறினால், களைப்பும் வியர்வையும் அடங்கிவி்டும்.”
“இப்பொழுது கால நிலை நன்றாக இருக்கிறது.”
“ஆம். இன்னும் பத்துப் பதினைந்து தினங்கள் வரை மழையைப் பற்றிய பயம் கிடையாது.”
“மழையை நினைக்கும்போது எனக்குப் பயமாக இருக்கிறது. தண்ணீரும் சேறுமாய்ப் பாதைகள் நடப்பதற்கு லாயக்கில்லாமல் போகின்றன.”
“கழுதைகள் நடப்பதென்றால் இன்னும் சிரமம்.”
“வீட்டிலே ஆட்டுக்கடாக்கள் கிடையாது. இதனாலேயே இந்தக்
கழுதைகளை ஓட்டிக்கொண்டு வந்தேன். சரி, நண்பா! நீ எங்கே போகிறாய்?”
“தாண்டே பக்கம். எங்களுடைய ஆடு மாடுகள் குதிரைகள் எல்லாம் அங்கேதான் இருக்கின்றன.”
“நானும்கூட அங்கேதான் போகிறேன். மாவு, தான்யம், பழங்கள், உப்பு இவைகளைக் கொண்டு சேர்ப்பதற்காகச் செல்கிறேன்.”
“அங்கே உங்கள் கால்நடைகளை யார் கவனித்துக்கொள்வது?”
“என்னுடைய முப்பாட்டனார். அவருக்கு உதவியாக என்னுடைய சகோதர-சகோதரிகளும் இருக்கிறார்கள்.”
“முப்பாட்டனாரா? அப்படியானால் அவர் மிகுந்த விருத்தராக வல்லவா இருப்பார்.”
“ஆம்; பெரிய தொண்டுக்கிழவர். அவ்வளவு வயதானவரை நாம் பார்க்கக்கூட முடியாது.”
“அந்தத் தள்ளாத கிழவர் எப்படி மந்தையைக் கவனிக்க முடியும்?”
“அவரா? இன்னும் அவருடைய சரீரம் ரொம்பப் பலமாயிருக்கிறது. அவருடைய ரோமங்கள் யாவும் நரைத்து விட்டாலுங்கூட, அவருடைய பற்கள் எல்லாம் உறுதியாயிருக்கின்றன. அவரைப் பார்ப்பவர்கள் ஐம்பது