அருகில் வந்த சூரனைப் பார்த்த திவா, புன்சிரிப்புடன் “எவ்வளவு அழகும் மணமும் பொருந்தியிருக்கின்றன இந்தப் புஷ்பங்கள்” என்றாள்.
“மின்னுகின்ற உன்னுடைய கூந்தலில் இவைகளைச் சூட்டினால் இன்னும் அதிக அழகாயிருக்கும்.”
“அப்படியானால், எனக்காகவா இந்தப் புஷ்பங்களையெல்லாம் கொண்டு வந்திருக்கிறாய்?”
“ஆமாம் திவா! உனக்காகவேதான். உன்னையும் இந்தப் புஷ்பங்களையும் சேர்த்துப் பார்க்கும் போது அப்சர மங்கையின் ஞாபகம் வந்தது.”
“அப்சர மங்கைகளா, அவர்கள் யார்?”
“அவர்கள் நீரில் வசிப்பவர்கள். சந்தோஷம் ஏற்படும்போது, இதயத்தில் பொங்கி வரும் ஆசையைத் தெரிந்து அவை யாவற்றையும் பூர்த்தி செய்விப்பார்கள். கோபம் வந்து விட்டாலோ, உயிரையும் விட்டு வைக்க மாட்டார்கள்.”
“அப்படியானால் நீ என்னையும் அந்த அப்சரஸ் என்று நினைக்கிறாயா?”
“ஆமாம்; ஆனால் கோபமடைபவளல்ல.”
“ஆனால், இதுவரை உன் மீது நான் ஆசை காட்டவே இல்லையே?”
இப்போது திவாவின் முகம் சடக்கென்று வேறுபட்டது. அவளுடைய இதயத்திலே பொங்கும் தாபக்கனல் பெருமூச்சாக வெளிப்பட்டது.
“இல்லை! திவா! நீ ஒரு பொழுதும் என்மீது கோபம் கொண்டது கிடையாது. நமது குழந்தைப் பருவத்தை நினைத்துப் பார்.”
“அப்பொழுது கூட என்ன! நீ நாணிக் கோணிக் கொண்டு தானே இருந்தாய்?”
“அன்றும் நீ என்னைக் கோபிக்கவில்லையே?”
“அந்தக் காலத்தில் நானே உன்னை வலிய முத்தமிட்டேன்.”
“ஆம்! அந்த முத்தங்கள் எவ்வளவு இனிமையாயிருந்தன!”
“ஆனால், எனது உருண்ட ஸ்தனங்கள் பூரித்துத் திரண்டெழுந்து, பரிவாரத்தின் வாலிபர்களையெல்லாம் எனது நெஞ்சையும் முகத்தையும் நோக்கி ஏங்கச் செய்கின்ற இக்காலத்தில் நான் உன்னை மறந்தே போய்விட்டேன்.” அதற்கு மேல் அவளுடைய உதடுகள் அசைய மறுத்து விட்டன. கொஞ்சம் மௌனமாய் நின்றாள்.
“திவா! அது உன்னுடைய குற்றமில்லையே.”
“வேறு யாருடைய குற்றம்?”
“என்னுடைய குற்றம்; முழுக்க முழுக்க அது என்னுடைய குற்றம். அந்த வாலிபர்கள் உன்னிடம் வேண்டி நின்றார்கள். நீ அள்ளி அள்ளிக் கொடுத்தாய். அவர்கள் முத்தம் கேட்டார்கள். நீ முத்தம் கொடுத்தாய். ஆலிங்கனத்துக்கு யாசித்தார்கள்; நீ ஆலிங்கனம் செய்தாய். நம்முடைய கூட்டத்தில்,