இந்த இருபது கோச தூரத்திற்குள் ஒரு கோவிலும் உடைக்கப்படவில்லை” எந்தத் தெய்வச் சிலையும் அவமானப் படுத்தப்பட வில்லை.”
“ஆம், இது முற்றிலும் பொய் சௌதரி மங்கள்ராம்! நீதான் என்னை விட அதிகமாக டெல்லிக்குப் போய் வருகிறாயே! நான் தசரா பார்ப்பதற்காக டெல்லிக்குப் போயிருந்தேன். அது எவ்வளவு பெரிய கூட்டம், அதிலே பாதிக்கு மேல் பெண்கள் ஹிந்துக்களின் திருவிழா, ஹிந்துக்களின் கூட்டம், ஹிந்து தெய்வங்களை அலங்கரித்து சுல்தானின் மாளிகை வாசலின் முன்னே சங்கும் மேளமும் முழங்க எடுத்துச் சென்றார்கள்.”
“ஆம், சேதாராம்! சேட் நிகாமலின் மாளிகைக்குப் பக்கத்திலேயே ஒரு பெரிய கோவில் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். எத்தனை லட்ச ரூபாய் செலவாகுமோ தெரியாது. சுல்தான் கோவில்களை இடிப்பதாயிருந்தால் தன் கண் முன்னாலேயே இவ்வளவு பெரிய கோவில் எழுப்புவதை ஏன் பார்த்துக் கொண்டிருக்கிறார்?”
“ஆம், மங்கள்ராம்! ராஜாவுக்கும் ராஜாவுக்கும் சண்டை ஏற்படுகிறது. சண்டையிலே யார் சாகிறார்கள்? யார் பிழைக்கிறார்கள்? என்றெல்லாம் யார் கவனிக்கிறார்கள்? முன்பெல்லாம் நமக்கு அக்கம்பக்கத்திலேகூட இந்த மாதிரிச் சண்டையும் கொலையும் நடந்து கொண்டிருந்தன. இப்பொழுது அந்த மாதிரி வார்த்தைகள் கூடக் காதில் விழுவதில்லையே?’
“அன்று நாம் அரசாங்க உத்தியோகஸ்தரைப் பார்க்கப் போயிருந்தோமே, அவர் சொன்னது உனக்கு நினைவிருக்கிறதா? முந்தைய சுல்தான்களெல்லாம் இந்த நாட்டைப் பறவைக் கூடாகவே கருதினார்கள். இப்பொழுதைய நமது சுல்தான் ‘லாபதீன்’ இதைத் தன் வீடாகவே கருதி, சுகதுக்கங்களிலும் நம்முடன் கலந்து கொண்டு வாழ விரும்புகிறார். ஆகையால், பிரஜைகளைச் சுரண்டமாட்டார். அவர்களுடைய சுக வாழ்வையே கவனிப்பார் என்று சொன்னாரல்லவா?”
“ஆம், அவர் சொல்லியபடியே இப்பொழுது எல்லாப் பக்கத்திலும் ஜனங்கள் சுகமாக இருக்கிறார்கள்.”
4
டெல்லிக்கு வெளியே அமைதி நிறைந்த கபர்ஸ்தான் (சமாதி). அதன் பக்கத்திலே சில புளிய மரங்களும் வேப்ப மரங்களும் நிற்கின்றன. மார்கழி மாத இரவு, குளிர் நிறைந்திருக்கிறது. எரிந்து கொண்டிருக்கும் நெருப்புக்குப் பக்கத்திலே, இரண்டு பக்கிரிகள் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் நமக்கு அறிமுகமான பாபா நூர்தின். மற்றொரு பக்கிரி தனது