“புழுதியிலே விழுந்துவிட்ட ககடுவார் வம்சத்தின் லட்சுமியை, மறுபடியும் தூக்கிவந்து நிறுத்தும் சக்தி படைத்த தோள்களை உடைய மாதவன் பாமா!”
“அப்பா! உங்கள் வாயால் பாமா என்று கூப்பிடுவதைக் கேட்க எவ்வளவு ஆசையாய் இருக்கிறது.”
“உன் தந்தையின் ஞாபகம் வருகிறதா மகளே?”
“ராஜ மாளிகையில் அடிக்கும் காற்றே வேறு மாதிரியிருக்கிறது அப்பா! எதை எடுத்தாலும் போலி வேஷமும், போலி ஆடம்பரங்களுந்தான். நான் சாதாரண மனிதர்களைப் போல அன்பு முறையிலே பழக முடிவதில்லை. பழைய ராஜ முறையோடு தந்தையைப் பட்டாரகர் என்று அழைக்கும் பழக்கம் போய்விட வேண்டும்.”
“அவைகள் போய்விட்டன மகளே! குமாரின் அந்தப்புரத்தைப் பார்த்தாயல்லவா!”
கண்ணிலே பொங்கி வரும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு பாமா, “அப்பா! நீங்கள் எங்களை மறுபடியும் மனிதர்களாக்கிவிட்டீர்கள்’ என்றாள்.
“இல்லை, மகளே! குமார ஹரிச்சந்திரரில்லாமல் வேறொருவராயிருந்தால், நான் கேவலம் தண்ணீர் தெளிக்கும் பிராமணனாய்த்தான் இருப்பேன். இவையெல்லாம் குமார ஹரிச்சந்திரருடைய...”
“அப்பா!”
குமாரரின் கண்கள் திறந்தன. பாமா அவரிடம் ஓடிச் சென்று, “என்னுடைய சந்திர! ராகுவின் வாயிலிருந்து மீண்டு வந்த சந்திர!”
“ஆம், பாமா! இப்பொழுது அப்பாவின் குரலொலி கேட்டதே!”
“அப்பாவா!”
“ககடுவார் வம்ச சூரியனை அஸ்தமிக்கச் செய்த அந்த அப்பாவையல்ல; நீ யாரை அப்பாவென்று அழைக்கிறாயோ, இந்த அப்பவையே நானும் அப்பாவென்று அழைக்கிறேன்.”
குமாரரின் கன்னங்களை மெதுவாகத் தடவிக் கொடுத்துக் கொண்டே சக்கரபாணி. “குமார்! உடம்பு எப்படி இருக்கிறது?” என்று கேட்டார்.
“உடம்பு சௌகரியமாகவே இருக்கிறது. யுத்தகளத்திலிருந்து காயப்பட்டு வந்ததாகவே தோன்றவில்லை.”
“காயம் மிக அபாயகரமானது குமார்!”
“இருக்கலாம், ஆனால், எங்கள் அமிர்தமளிக்கும் தந்தையும் கூடவே இருந்தாரே.”
“மெதுவாகப் பேசு குமார்!”
“அப்பா சக்கரபாணியின் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும், ஹரிச்சந்திரனுக்குப் பிரம வாக்கியம்.”