புரிந்துகொண்டேன். கிராமத்து ஜனங்கள் எங்களை உயர்குலத்தவர்கள் என்று ஒப்புக் கொண்டாலும் நாங்கள் பிராமணர்கள் என்பதில் சந்தேகம் கொண்டார்கள். எங்களுடைய கிராமம் ஒரு பெரிய கிராமம். அதில் கடைகளும், வியாபாரிகளான பனியாக்களின் வீடுகளும் இருந்தன. அங்கு சில நாகர்களின் வீடுகளும் இருந்தன. ஜனங்கள் அவர்களையும் பனியா என்றே அழைத்தார்கள். ஆனால் அவர்களோ எங்களைப் போலவே தாங்களும் பிராமணர்கள் என்று சொல்லிக் கொண்டார்கள். அநேக நாககுலப் பெண்கள், எங்கள் குடும்பத்திலே கொள்ளப்பட்டிருக்கிறார்கள். எங்களைப் பிராமணர்களல்ல என்று கிராம ஜனங்கள் மறுப்பதற்கு இதுவும் ஒரு காரணம். பிராமணர்களின் உணவு நியமம், கொள்வினை கொடுப்பினை முதலிய ஒழுங்குகளை அலட்சியம் செய்யும் நாங்கள் எப்படி பிராமணர்களாய் இருக்க முடியும் என்பது அவர்கள் கருத்து. என்னோடு விளையாடும் சிறுவர்கள் கோபம் அடையும்பொழுது என்னை ‘க்ஷத்திரியன்’ என்று சொல்லிக் கேலி செய்வார்கள். இதைப் பற்றி நான் தாயிடம் அடிக்கடிக் கேட்பேன். அவள் தட்டிக் கழித்து விடுவாள்.
நான் இன்னும் கொஞ்சம் பெரியவனாகி விட்டேன். பத்து வயதிருக்கும். கிராமத்தின் ஒரு பிராமணக் குருவினுடைய பாடசாலையிலே படித்துக் கொண்டிருந்தேன். எனது தோழ மாணவர்களில், என்னையும் இரண்டு நாகர்குலப் பையன்களையும் தவிர, மற்ற எல்லோரும் பிராமணர்கள்; ஜனங்கள் சொல்கிறபடி பக்கா பிராமணர்கள். எங்கள் மூவரையும் போலிப் பிராமணர்கள் என்று அவர்கள் அழைப்பார்கள். குருஜியின் மாணவர்களிலே, நான் மிகுந்த
அறிவுக் கூர்மையுடையவன். அதனால், அவர் என்னிடத்திலே அதிக அன்புடையவராக இருந்தார். எனது முன்னோர்களின் சுபாவம் எனக்கும் இருந்தது. மற்றவர்கள் சொல்வதைச் சகித்துக் கொண்டு போகாமல், எதற்கெடுத்தாலும் சண்டைக்கு நிற்பேன். என்னுடைய தோழ மாணவர்களிலே ஒருவன் ஒருநாள்“எங்கோ கிடந்த க்ஷத்திரியன் வந்து, இங்கு பிராமணன் ஆகிவிட்டான்” என்று என்னைக் கேலி செய்தான். எனது சிறிய தந்தையாரின் மைத்துனன் மகன் என்னோடு சேர்ந்து பேசவே, அவனையும் “கிரேக்கப் பயல் பிராமணனாகப் பார்க்கிறான்” என்று குத்திக் காட்டினான். இந்தக் கேலியை என்னால் தாங்க முடியவில்லை. குழந்தைப் பருவத்திலும் இந்த மாதிரிக் கேலிகளை நான் கேட்டிருக்கிறேன். அப்பொழுதெல்லாம் அவை இவ்வளவு தூரம் மனத்திலே தைத்ததில்லை. பாடசாலையில் எங்கள் மூவரையும் எதிர்த்து,