சேனாதிபதி புஷ்யமித்திரன், தன்னுடைய அரசனைக் கொன்று விட்டாலும் மௌரிய சாம்ராஜ்யம் முழுவதையும் தன் ஆதிக்கத்தில் கொண்டு வர
முடியவில்லை. பாஞ்சாலம் வரை உள்ள பிரதேசத்தை, கிரேக்க அரசன் மினாந்தர் எடுத்துக் கொண்டுவிட்டான். அதோடு மட்டுமல்ல; ஒருமுறை சாகேதம் வரையிலும் அவன் வந்தானென்று புஷ்யமித்திரனுடைய பிராமணப் புரோகிதன் பதஞ்சலி எழுதிவைத்திருக்கிறான். இதிலிருந்து புஷ்யமித்திரனுடைய ராஜ்யகால ஆரம்ப நாட்களிலுங்கூட அதன் பெயர் சாகேதம் என்றுதான் இருந்ததென்பதும், பதஞ்சலி-புஷ்யமித்திரன் காலத்திலும் அந்நகருக்கு அயோத்தியா என்று பெயர் ஏற்படவில்லையென்பதும் நிச்சயமாகத் தெரிகிறது.
புஷ்யமித்திரன், பதஞ்சலி, மினாந்தர் இவர்களுடைய காலத்திற்கு இருநூறு ஆண்டுகளுக்கும் பிந்திய காலத்தைப் பற்றி நாம் இப்போழுது பேசுகிறோம். இந்தக் காலத்திலும் சாகேத நகரத்தில் பெரிய பெரிய ‘சிரேஷ்டர்கள் (சேட்) வசித்து வந்தனர். லட்சுமி வசிக்கும் இடத்தில், சரஸ்வதிக்கும் ஓரளவு மரியாதை செலுத்த வேண்டுவது அவசியமல்லவா? ஆகவே, மதமும் பிராமணர்களும், வெல்லத்தை மொய்க்கும் எறும்புகளைப் போல் அங்கு கூடியிருந்ததில் ஆச்சரியமில்லை. இந்தப் பிராமண குலத்தில், கலைச் செல்வமும் பொருட்செல்வமும் ஒருங்கே அமையப் பெற்றிருந்த ஒரு பிராமணக் குடும்பம் இருந்தது. அந்தக் குடும்பத் தலைவனின் பெயரை, காலவெள்ளம் அடித்துக் கொண்டுபோய்விட்டது. ஆனால் குடும்பத் தலைவியின் பெயரை அவளது புதல்வன் சிரஞ்சீவியாக்கி விட்டான். அந்த அம்மையின் கண்கள் தங்கத்தைப் போல் மஞ்சள் நிறமாய் இருந்ததால், அவளுக்கு சுவர்ணாட்சி என்ற பெயர் ஏற்பட்டதாம். அந்தக் காலத்தில், பிராமண - க்ஷத்திரியர்களிடையே நீலநிறக் கண்களும், மஞ்சள் நிறக் கண்களும் காணப்பட்டன. அந்தப் பிராமணப் பெண் சுவர்ணாட்சிக்கு ஒரு புத்திரன்
இருந்தான். அவளைப் போலவே அவனுடைய கண்களும் மஞ்சள் நிறம்; பொன்னிறமான தலை மயிர், வெண்மை நிற மேனி.
2
வசந்த காலம். மாம்பூக்கள் நாலாபுறமும் நறுமணத்தைப் பரப்பிக் கொண்டிருந்தன. மரங்கள் யாவும் சருகுகளை உதிர்த்துவிட்டு, புதிய இலை ஆடை போர்த்தியிருந்தன. அன்று சித்திரை மாதத்து சுக்கில பட்ச நவமி சாகேத நகரத்தின் ஆண்களும் பெண்களும் சரயூ நதிக்கரையிலே வந்து கூடினர். நீச்சல் போட்டி நடைபெறப் போகிறது. சாகேதவாசிகள் வசந்தோற்சவத்தை நீச்சுப் போட்டி மூலமே கொண்டாடுவது வழக்கம். அந்த நீச்சுப் போட்டியிலே, யுவர்களும் யுவதிகளும் கலந்து கொள்வார்கள்; ஒரே துறையிலே நிர்வாண