மற்றது பெண். மஞ்சள் படிந்த வெண்மையும் மிருதுவுமான ரோமமும் பெரிய நீல நிறமான விழிகளையுமுடைய அந்தப் பையன் அழுது கொண்டிருக்கிறான். வாயில் ஓர் எலும்பை வைத்துச் சுவைத்துக் கொண்டிருக்கும் சிறு பெண் பக்கத்தில் நிற்கிறாள்.
“அகின்! இங்கே வா, நான் இங்கே இருக்கிறேன்” என்று தன்னுடைய நடுங்குங் குரலில் கிழவி பையனை அழைக்கிறாள். ஆனால் அகின் எழுந்திருக்கவில்லை. இந்தச் சமயத்தில் எட்டு வயதுப் பையன் அகினைத் தூக்கி கிழவிக்குச் சமீபத்தில் விட்டு, “அம்மா! ரோசனா எலும்பைப் பறித்துக் கொண்டாள். அதனால் அகின் அழுகின்றான்” என்றான்.
கிழவி தன்னுடைய வற்றிப்போன கைகளால் அகினைத் தூக்கினாள். இன்னும் அவன் அழுது கொண்டுதானிருக்கிறான். அகினுடைய கண்களிலிருந்து பொங்கி வழியும் கண்ணீர், அவனுடைய அழுக்குப் படிந்த கன்னத்திலே பெரிய ரேகைகளை உண்டாக்கிச் செல்லுகிறது! கிழவி அவனை முகத்தோடு அணைத்துக்கொண்டு, “அகின்! அழாதே. ரோசனாவை அடித்து விடுவோம்” என்று பனி சேர்ந்திருக்கும் பூமியைத் தன்னுடைய கையால் அறைந்தாள். ஆனால் அகினுடைய அழுகையோ கண்ணீரோ நின்றபாடில்லை. தன்னுடைய கையால் அவனுடைய கண்ணீரைத் துடைத்தாள். அந்தச் சிறிய அழகிய வதனத்தின் கண்ணீரைத் துடைத்ததால், அவளுடைய கையில் படிந்திருந்த அழுக்கு சில கறுப்புக் கோடுகளைத் தீட்டிற்றேயொழிய, பையனுடைய அழுகை நிற்கவில்லை. மாமிசப் பசையேயில்லாது, பை மாதிரி நீண்டு
தொங்கிக் கொண்டிருக்கும் அவளுடைய ஸ்தனத்தின் நுனியை அகினுடைய வாயில் வைத்தாள். பையனும் உடனே அழுகையை நிறுத்திக் கொண்டான்.
அது என்ன சப்தம்? ரொம்ப சமீபத்தில் கேட்கிறதே! மனிதக் குரல். ஆம், இனிமையான இளம் குரல் யாரையோ அழைப்பது போல் கேட்கிறதல்லவா?
“அகின்! அகின்!”
சப்தத்தைக் கேட்ட அகின், அந்தப் பக்கம் திரும்பிப் பார்த்துக் கொண்டே அழ ஆரம்பித்துவிட்டான்.
தலையில் விறகுச் சுமையுடன் வேகமாக வந்த இரண்டு பெண்கள் தங்களுடைய சுமையைக் குகைக்குப் பக்கமாகப் போட்டுவிட்டு ஒருத்தி ரோசனாவையும், ஒருத்தி அகினையும் தூக்கி அணைத்துக் கொண்டார்கள். இரு பெண்களும், அந்த இரண்டு குழந்தைகளின் தாய்கள் மாத்திரமல்ல; இருவரும் உடன்பிறந்த சகோதரிகள் என்பதையும் அவர்களுடைய முகச்சாயல் நமக்குத் தெரிவிக்கிறதல்லவா? நீல நிற விழிகளுங்கூட ஒரே மாதிரிதான்; ஒன்று-