தன்னுடைய முகத்தில் அரும்பித் துளிர்க்கும் வியர்வையை மெதுவாகத் துடைத்துக்கொண்டே வாலிபனும் பஞ்சடைந்த கண்களால் அந்த யுவதியைப் பார்த்தான்.
தன்னுடைய பொன்னிறமான கூந்தலைச் சாதாரணமாக முடிந்து கொண்டு உடம்பைச் சுற்றி ஒரு போர்வையும் இடையில் ஒரு சாதாரண லுங்கியும் அணிந்துகொண்டிருந்த அந்த யுவதியின் விநோதமான வேஷத்தை ஆச்சரியத்தோடு பார்த்தான். முன்பின் அறியாத அந்த வழிப்போக்கனைச் சிறிது நேரம் பார்த்துக்கொண்டே நின்ற அந்தக் குமரி, மத்ர குலத்தாருக்கு இயற்கையான இனிய புன்முறுவலுடன்,
“சகோதரா! நீ ரொம்பத் தாகம் அடைந்திருக்கிறாய் என்று கருதுகிறேன்”என்றாள்.
வழிப்போக்கன் இயற்கையாகப் பலவீனமடைந்து கொண்டிருக்கும் தன் இதயத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், “ஆம், அதிகமாயிருக்கிறது!” என்றான்.
“இதோ தண்ணீர் கொண்டு வருகிறேன்!” அவசர அவசரமாக வாளியிலே தண்ணீரை மொண்டு மேலே இழுத்தாள். அதற்குள் அவன் பக்கத்தில் சென்று உட்கார்ந்தான். அவனுடைய ஆஜானுபாகுவான உடலும், உறுதியான எலும்புகளும் அவனுள்ளே அடங்கிக் கிடக்கும் எல்லையற்ற ஆண்மையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன. தண்ணீர்ப் பையோடு சேர்த்துக் கட்டியிருந்த தோல் போகணியை எடுத்து, அதிலே தண்ணீரை நிரப்பி வழிப்போக்கனிடம் கொடுத்தாள் யுவதி. இரண்டு மூன்று துளிகளே குடித்த அவன், சிறிது மௌனமாகப் பூமியை நோக்கியவண்ணம் உட்கார்ந்திருந்தான். அப்பால், ஒரே மூச்சில் அந்தப் பாத்திரத்திலிருந்த தண்ணீர் பூராவையும் பருகினான். பாவம், அவ்வளவு தாகம் அவனுக்கு! அந்தச் சிறு பாத்திரத்தை அவனுடைய கை நழுவ விட்டது. தன்னைச் சமாளித்துக் கொள்ள முடியாமல் அப்படியே, கீழே சாய்ந்தான். கண்கள் மூடிக் கொண்டன. மூர்ச்சையாகி விட்டான். இதைப் பார்த்து அசைவற்று நின்ற யுவதி, வேகமாகத் தன்னுடைய தலையில் சுற்றியிருந்த துணியைத் தண்ணீரில் நனைத்து அவனுடைய நெற்றியையும், முகத்தையும் அந்த ஈரத்துணியால் துடைத்தாள். சிறிது நேரத்தில் அவனுடைய கண்கள் திறந்தன. அவன் வெட்கமடைந்து மெல்லிய குரலில் “மிகவும்
வருந்துகிறேன்! உனக்கு மிகுந்த கஷ்டத்தைக் கொடுத்து விட்டேன்” என்றான்.