அதிகாரம் 2
2 யெருசலேமில் அவர் நிகழும்படி செய்த கொடிய தீமைகளைப் போல வானத்தின் கீழ் நிகழ்ந்ததே இல்லை@ இவை யாவும் மோயீசனுடைய நூலில் எழுதப்பட்டுள்ளவாறே நேர்ந்தன:
3 ஒருவன் தன் மகனுடைய சதையைப் பிடுங்கித் தின்று, இன்னொருவன் தன் மகளுடைய சதையைப் பிடுங்கித் தின்னும் அளவுக்கு நமக்கு நெருக்கடி வந்தது.
4 ஆண்டவர் அவர்களைப் புறவினத்தார் அனைவர் நடுவிலும் சிதறடித்து, அவர்கள் நடுவில் அவர்களைப் பாழடைந்தவர்களாகவும், இழிவான பேச்சுக்கு இலக்காகவும், நம்மைச் சுற்றிலுமுள்ள அரசுகள் எல்லாவற்றிற்கும் அவர்களை அடிமைகளாகவும் கையளித்தார்.
5 நம் கடவுளாகிய ஆண்டவரின் குரலொலிக்குக் கீழ்ப்படியாமல் அவருக்கு விரோதமாய்ப் பாவம் செய்ததால், நாம் உயர்த்தப்படாமல் தாழ்த்தப்பட்டோம்.
6 நீதி நம் கடவுளாகிய ஆண்டவருக்குரியது@ ஆனால், இன்றிருப்பது போல, நாணித் தலை குனிதல் தான் நமக்கும் நம் தந்தையர்களுக்கும் உரியது.
7 ஏனெனில் நமக்கு வந்து நேர்ந்த இந்தத் தீமைகள் அனைத்தையும் ஆண்டவர் ஏற்கெனவே நமக்கு அறிவித்திருந்தார்.
8 ஆயினும் நாம் ஒவ்வொருவரும், நாம் மூழ்கியிருந்த தீய பழக்கத்தை விட்டு மனந்திரும்பும்படி நம் கடவுளாகிய ஆண்டவரைப் பார்த்துக் கெஞ்சி மன்றாடவில்லை.
9 ஆண்டவர் நமக்குக் கட்டளையிட்டிருந்த செயல்களிலெல்லாம் நீதியுள்ளவராய் இருந்ததால், ஆண்டவர் இத் தீமைகளைத் தயாராய் வைத்திருந்து நம் மேல் வரச் செய்தார்.
10 ஆண்டவர் நமக்கு வெளிப்படையாய்க் கொடுத்திருந்த கற்பனைகளின்படி நடக்காமல், நாம் அவருக்குச் செவிசாய்க்க மறுத்தோம்.
11 "ஆனால் இப்பொழுது இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவரே, நீட்டிய கையாலும் மாபெரும் வல்லமையாலும் பல புதுமைகளையும் வியத்தகு செயல்களையுஞ் செய்து, புயபலத்தைக் காட்டி உம்முடைய மக்களை எகிப்து நாட்டிலிருந்து விடுதலை செய்ததன் மூலம் இன்று வரையில் உம் திருப்பெயருக்குப் புகழ்தேடிக் கொண்டவரே@
12 எங்கள் கடவுளாகிய ஆண்டவரே, உம் பரிசுத்த கற்பனைகளுக்கெல்லாம் விரோதமாய் நாங்கள் பாவஞ் செய்தோம்@ அக்கிரமமான செயல்களைச் செய்து, அநியாயங்களைக் கட்டிக்கொண்டோம்@
13 புறவினத்தார் நடுவில் சிதறி வாழ்கின்ற நாங்கள் மிகச் சிலராய் விடப்பட்டிருப்பதால், எங்கள் பேரில் நீர் கொண்ட கோபத்தைத் திருப்பியருளும்.
14 ஆண்டவரே, எங்கள் வேண்டுதல்களையும் மன்றாட்டுகளையும் கேட்டருளும்@ உமது மகிமைக்காவே எங்களைக் காப்பாற்றும்@ எங்கள் நாட்டிலிருந்து எங்களை நாடுகடத்தியவர்களுக்கு நாங்கள் உகந்தவர்களாய் இருக்கும்படி செய்தருளும்@
15 இஸ்ராயேலும் இஸ்ராயேலின் இனத்தாரும் உமது திருப்பெயரையே தாங்கியிருப்பதால், நீரே கடவுளாகிய ஆண்டவர் என்பதை உலகம் முழுவதும் அறிந்துகொள்ளும்.
16 ஆண்டவரே, உம்முடைய பரிசுத்த இருப்பிடத்திலிருந்து எங்களைக் கண்ணோக்கியருளும்@ செவி தந்து எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
17 கண் திறந்து எங்களைப் பார்த்தருளும்@ ஏனெனில் இறந்து போய்ப் பாதாளத்தில் இருக்கிறவர்கள், தங்களுடைய ஆவி உடலை விட்டுப் பிரிந்து போன பின், ஆண்டவருக்கு மகிமை தரமுடியாதே! நீதி வழியில் நடக்க முடியாதே!
18 ஆனால், தான் கட்டிக்கொண்ட பாவச் சுமையால் இளைத்துக் களைத்து, வாடி வதங்கி கண்கள் மங்கிச் சோர்வடைந்து, நாணித்திரியும் ஆன்மாவே ஆண்டவராகிய உமக்கு மகிமை தரும், நீதி நெறியில் நடக்கும்.
19 ஏனெனில் எங்கள் கடவுளாகிய ஆண்டவரே, எங்கள் தந்தையர்கள், அரசர்கள் ஆகியோரின் நீதிச்செயல்களை முன்னிட்டு, உம் திருமுன் உம்மை இறைஞ்சி உம்முடைய இரக்கத்தை நாங்கள் கொஞ்சிக் கேட்கவில்லை.
20 உம்முடைய ஊழியர்களாகிய இறைவாக்கினர்களின் வாயிலாய் நீர் சொல்லியிருந்தவாறு உம்முடைய கோபத்தையும் ஆத்திரத்தையும் எங்கள் மேல் காட்டினீர்.
21 அந்த இறைவாக்கினர் இவ்வாறு சொல்லியிருந்தனர்: "ஆண்டவர் கூறுகிறார்: உடல் வளைந்து தலை வணங்கிப் பபிலோன் அரசனுக்குக் கீழ்ப்படிந்து வேலை செய்வீர்களாகில், உங்கள் தந்தையர்களுக்கு நாம் தந்த நாட்டில் அமைதியாய் வாழ்வீர்கள்.
22 ஆனால், பபிலோனிய அரசனுக்கு நீங்கள் ஊழியம் செய்ய வேண்டுமென்று உங்கள் கடவுளாகிய ஆண்டவர் சொல்லிய வாக்குக்கு நீங்கள் செவி சாய்க்காமல் போவீர்களாகில்,
23 யூதாவின் பட்டணங்களிலும் யெருசலேமின் தெருக்களிலும், மகிழ்ச்சியின் முழக்கத்தையும், அக்களிப்பின் ஆரவாரத்தையும், மணவாளனின் குரலையும், மணவாட்டியின் குரலையும் ஒயப் பண்ணுவோம்@ குடியிருப்பாரற்று நாடு முழுவதும் பாலைவெளியாகிவிடும்."
24 ஆனால் பபிலோன் அரசனுக்குக் கீழ்ப்படிந்திருக்கும்படி நீர் சொல்லிய வாக்குக்கு நாங்கள் செவிசாய்க்கவில்லை@ ஆதலால் உம்முடைய ஊழியர்களாகிய இறைவாக்கினர்கள் வாயிலாய் நீர் முன்பே சொல்லியிருந்த வார்த்தைகளை நிறைவேற்றி, எங்கள் அரசர்களின் எலும்புகளும், எங்கள் தந்தையர்களின் எலும்புகளும் அவை இருக்கும் இடத்தை விட்டுப் புறம்பே எறியப்படச் செய்தீர்.
25 இதோ அவை கதிரவனின் வெப்பத்திலும், இரவின் குளிரிலும் எறியப்பட்டுள்ளன. அவர்களோ கொடிய வேதனைகளுக்கு இலக்காகிப் பஞ்சத்தாலும் வாளாலும் கொள்ளை நோயாலும் மடிந்தார்கள்.
26 இஸ்ராயேல் வீட்டாருடையவும் யூதா வீட்டாருடையவும் அக்கிரமங்களின் காரணமாய், உமது திருப் பெயரைப் புகழ்ந்தேற்றுவதற்காகக் கட்டப்பட்ட கோயிலையும் இன்றிருக்கும் நிலைக்குக் கொண்டு வந்தீர்.
27 ஆயினும் எங்கள் கடவுளாகிய ஆண்டவரே, உமது மிகுதியான பரிவும் மாபெரும் இரக்கமும் தோன்றும்படி எங்களை இவ்வாறு நடத்தினீர்.
28 இஸ்ராயேல் மக்களுக்கு உமது திருச்சட்டத்தை எழுதித் தரும்படி உம்முடைய ஊழியராகிய மோயீசனுக்குக் கட்டளையிட்ட போது, அவர் வாயிலாய் நீர் சொல்லியது இதுவே:
29 நீங்கள் நமது சொல்லுக்குச் செவிசாய்க்காமல் போவீர்களானால், இந்தப் பெரும் கும்பலை மிகச் சிறிதாக்கி, புறவினத்தார் நடுவிலே சிதறடிப்போம்.
30 இந்த மக்கள் முரட்டுத்தனம் உள்ளவர்களானதால், இவர்கள் நமக்குச் செவிசாய்க்க மாட்டார்கள் என்பது நமக்குத் தெரியும்@ இவர்கள் அடிமைகளாய்க் கொண்டு போகப்படும் நாட்டில் தான், உள்ளத்தில் எண்ணிப் பார்த்து மனந்திரும்புவார்கள்.
31 அப்போது நாமே அவர்களுடைய கடவுளாகிய ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வார்கள்@ நாம் அவர்களுக்குப் பணியும் இதயத்தையும், கேட்கும் திறன் வாய்ந்த செவிகளையும் கொடுப்போம்.
32 அவர்கள் அடிமைப்பட்டிருக்கும் நாட்டில் நம்மைப் புகழ்வார்கள்@ நமது பெயரை நினைவுகூர்வார்கள்.
33 நமக்கு விரோதமாய்ப் பாவஞ் செய்த தங்கள் தந்தையர்களின் நெறியை நினைவில் இருத்திக் கொண்டு, தங்கள் தீய செயல்களையும் முரட்டுத்தனத்தையும் விட்டு விடுவார்கள்.
34 ஆபிரகாம், ஈசாக், யாக்கோபு இவர்களுக்கு நாம் ஆணையிட்டு வாக்குறுதி தந்த நாட்டுக்கு அவர்களை மீண்டும் கொண்டு வந்து சேர்ப்போம்@ அவர்கள் அதை ஆளுவார்கள்@ மேலும் நாம் அவர்களைப் பலுகச் செய்வோம்@ அவர்கள் எண்ணிக்கையில் குறையமாட்டார்கள்.
35 அவர்களோடு முடிவில்லாக் காலத்திற்கும் மற்றுமோர் உடன்படிக்கை செய்து கொள்வோம்@ அப்போது நாம் அவர்களுக்குக் கடவுளாய் இருப்போம்@ அவர்கள் நம் மக்களாய் இருப்பார். நம் குடிமக்களான இஸ்ராயேலின் மக்களை, நாம் அவர்களுக்குக் கொடுத்த நாட்டிலிருந்து இனிமேல் அப்புறப்படுத்த மாட்டோம்."