இரண்டாம் நரசிம்மவர்மன் (அ) ராஜசிம்மன் (கி.பி. 695 - 722)
முதலாம் நரசிம்மவர்மனைத் தொடர்ந்து இரண்டாம் மகேந்திரவர்மனும், முதலாம் பரமேஸ்வரவர்மனும் ஆட்சிக்கு வந்தனர். அவர்களது ஆட்சிக் காலத்திலும் பல்லவ சாளுக்கிய மோதல்கள் தொடர்ந்தன. பின்னர் இரண்டாம் நரசிம்மவர்மன் ஆட்சிப் பொறுப்பேற்றான். அவன் ராஜசிம்மன் என்றும் அழைக்கப்பட்டான். அவனது ஆட்சிக்காலம் போர்களற்ற அமைதிக் காலமாக விளங்கியது. கலை, கட்டிடக் கலையில் அவனது கவனம் திரும்பியது. மாமல்லபுரத்திலுள்ள கடற்கரைக் கோயில், காஞ்சி கைலாசநாதர் ஆலயம் ஆகியன அவனது ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டவை. கலை இலக்கியத்தையும் அவன் ஆதரித்துப் போற்றினான். புகழ்மிக்க வடமொழி அறிஞரான தண்டின் அவனது அவையை அலங்கரித்ததாகக் கூறப்படுகிறது. சீனாவுக்கு அவன் தூதுக் குழுக்களை அனுப்பி வைத்தான். கடல் வாணிபம் அவனது ஆட்சிக் காலத்தில் செழித்தது. சங்கரபக்தன், வாத்யவித்யாதரன், ஆகமப்பிரியன் போன்ற விருதுகளையும் ராஜசிம்மன் சூட்டிக் கொண்டான்.
அடுத்து, இரண்டாம் பரமேஸ்வரவர்மன், இரண்டாம் நந்திவர்மன் ஆகியோர் ஆட்சிக்கு வந்தனர். பல்லவர்களது ஆட்சி கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை நீடித்தது. சோழ அரசன் முதலாம் ஆதித்தன் கடைசி பல்லவ அரசன் அபராஜிதனை முறியடித்து காஞ்சிப் பகுதியைக் கைப்பற்றினான். அத்துடன் பல்லவ மரபு முடிவுக்கு வந்தது.
பல்லவர் ஆட்சி முறை
நரசிம்மவர்மன் II
பல்லவர்கள் நன்கு சீரமைக்கப்பட்ட ஆட்சி முறையைக் கொண்டிருந்தனர். பல்லவ அரசு பல கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அரசரால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் கோட்ட நிர்வாகத்தை நடத்தினர். ஆட்சியின் மையப் பொறுப்பில் அரசர் இருந்தார். அவருக்கு உதவியாக திறமைமிக்க அமைச்சர்கள் இருந்தனர். நீதியின் ஊற்றுக்கண்ணாக அரசர் செயல்பட்டார். நன்கு பயிற்றுவிக்கப்பட்ட படையை அவர் பெற்றிருந்தார். ஆலயங்களுக்கு அவர் அளித்த நிலக்கொடை தேவதானம் எனப்பட்டது, பிராமணர்களுக்கு வழங்கிய நிலக்கொடை பிரமதேயமாகும். நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதி செய்துகொடுக்க வேண்டியது அரசனது கடமையாகும். பல்லவ அரசர்கள் பல நீர்ப்பாசன ஏரிகளை வெட்டுவித்தனர். முதலாம் மகேந்திரவர்மன் ஆட்சிக் காலத்தில் மகேந்திரவாடி, மாமண்டூர் ஆகிய இடங்களில் ஏரிகள் வெட்டப்பட்டன. பல்லவர்களின் கல்வெட்டுகளிலிருந்து அரசு வசூலித்த வரிகள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்கிறோம்.
அரசின் முக்கிய வருவாய் நிலவரி மூலமாகவே கிடைத்தது. பிரமதேய மற்றும் தேவதான நிலங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டது. வணிகர்களும் கைவினைஞர்களும் அரசுக்கு வரி செலுத்தினர். தச்சர், பொற்கொல்லர், சலவைத் தொழிலாளர், எண்ணெய் வணிகர், நெசவாளர் போன்றோர் செலுத்திய வரிகள் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. சபை மற்றும் சபைக் குழுக்கள் போன்ற கிராம நிர்வாக அமைப்புகள் குறித்தும் பல்லவர்கால கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. கிராம நிலங்கள் கோயில் நிர்வாகம், உள்ளாட்சி போன்ற அலுவல்களை கிராம சபைகள் கவனித்து வந்தன.