ஆனால், சகோதரர்கள் ஒத்துழைக்க மறுக்கவே ஹூமாயூன் மீண்டும் தனியாகவே ஷெர்கானை எதிர்கொண்டார். 1540ல் பில்கிராம் போர் நடைபெற்றது. இது கனோஜ் போர் எனவும் அழைக்கப்படுகிறது. இப்போரில் ஷெர்கான் ஹூமாயூனை மீண்டும் முறியடித்தார். நாடிழந்த ஹூமாயூன் அடுத்த பதினைந்து ஆண்டுகள் இந்தியாவுக்கு வெளியே வாழ நேர்ந்தது.
சூர் இடைவெளி (1540 - 1555)
சூர்மரபை தோற்றுவித்தவர் ஷெர்ஷா. அவரது இயற்பெயர் பரித். பீகாரிலுள்ள சசாரம் என்ற பகுதியின் ஜாகீர்தாரான ஹசன்கான் என்பவரின் மகன். பின்னர், பரீத் பீகாரின் ஆப்கானிய ஆட்சியாளரிடம் பணிபுரிந்தார். பரித்தின் வீரச் செயலைப் பாராட்டியே அந்த ஆப்கானிய ஆட்சியாளர் ஷெர்கான் என்ற பட்டத்தை அளித்தார். ஷெர்கான் சௌசாப் போரில் ஹூமாயூனைத் தோற்கடித்தார் என்பதை ஏற்கனவே கண்டோம். 1540ல் ஷெர்கான் ஷெர்ஷா என்ற பட்டத்தோடு டெல்லியின் ஆட்சியாளரானார்.