மௌரியப் பேரரசு நிறுவப்பட்டதிலிருந்து இந்திய வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது. முதன்முறையாக இந்தியாவில் அரசியல் ஓற்றுமை ஏற்பட்டது. வரலாற்றுக்கான சான்றுகளும் காலக்கணிப்பும் துல்லியமாக இருப்பதால் வரலாறு எழுதுவதிலும் தெளிவு பிறந்தது. ஏராளமான உள்நாட்டு, அயல்நாட்டு இலக்கிய ஆதாரங்களோடு, சுல்வெட்டு தகவல்களும் இக்காலத்திய வரலாற்றை எழுதுவதற்கு பயன்படுகின்றன.
இலக்கிய சான்றுகள்
கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம்
கௌடில்யர்
வடமொழி நூலான அர்த்த சாஸ்திரத்தை எழுதியவர் கௌடில்யர். இவர் சந்திரகுப்தமௌரியரின் சம காலத்தவர். கௌடில்யர் 'இந்திய மாக்கியவள்ளி' என்றும் அழைக்கப்படுகிறார். 1904 ஆம் ஆண்டுதான் ஆர். சாமாசாஸ்திரி என்பவரால் அர்த்த சாஸ்திரத்தின் சுவடிகள் கண்டெக்கப்பட்டன. அர்த்த சாஸ்திரம் 15 புத்தகங்களையும் 180 அத்தியாயங்களையும் கொண்டது. இதனை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். முதல் பகுதி அரசன், அரசவை, அரசாங்கத்தின் பல்வேறு துறைகள் பற்றிக் கூறுகிறது. இரண்டாம் பகுதி உரிமையியல் மற்றும் குற்றவியல் சட்டங்களையும், மூன்றாம் பகுதி அரசியல் வெல்திறன், போர் ஆகியவற்றையும் எடுத்துரைக்கிறது. மௌரியர் வரலாற்றுக்கு முக்கிய இலக்கிய சான்றாக இந்த நூல் திகழ்கிறது.
விசாகதத்தரின் முத்ராராட்சசம்
முத்ராராட்சசம்
விசாகதத்தரால் இயற்றப்பட்ட முத்ராராட்சசம் ஒரு வடமொழி நாடக நூலாகும். குப்தர் காலத்தில் இந்த நூல் எழுதப்பட்டாலும் கௌடில்யரின் துணையோடு சந்திரகுப்தன் நந்தர்களை முறியடித்து மௌரிய ஆட்சியை எப்படி நிறுவினான் என்பதை இது விவரிக்கிறது. மௌரியர்கால சமூக பொருளாதார நிலைமைகளையும் எடுத்துக் கூறுகிறது.
மெகஸ்தனிஸ் எழுதிய இண்டிகா
சந்திரகுப்த மௌரியரின் அவையில் கிரேக்கத் தூதராக இருந்தவர் மெகஸ்தனிஸ். அவர் எழுதிய நூலான இண்டிகா முழுமையாக கிடைக்கவில்லை. இருப்பினும், மௌரியர் ஆட்சிமுறை, குறிப்பாக பாடலிபுத்திர நகராட்சி, படைத்துறை நிர்வாகம் குறித்த தகவல்களை இந்த நூல் தருகிறது. மௌரியர்கால சமூகம் குறித்த அவரது வர்ணனை குறிப்பிடத்தக்கது. அவர் கூறும் ஒரு சில நம்ப இயலாத தகவல்களை மிகுந்த எச்சரிக்கையுடனேயே கணக்கில் கொள்ள வேண்டும்.
பிற இலக்கியங்கள்
மேற்கூறிய மூன்று நூல்கள் தவிர, புராணங்களும், ஜாதகக் கதைகள் போன்ற புத்த சமய இலக்கியங்களும் மௌரியர் வரலாறு குறித்த தகவல்களைத் தருகின்றன. இலங்கை நூல்களான மகாவம்சம், தீபவம்சம் இரண்டும் இலங்கையில் அசோகரது முயற்சியால் புத்தசமயம் பரவிய வரலாற்றைக் கூறுகினறன.