நந்தவம்ச ஆட்சியில் மகதத்தின் புகழ் அதன் உச்சிக்கு சென்றது. அவர்கள் பெற்ற வெற்றிகள் கங்கைச் சமவெளிக்கு அப்பாலும் சென்றது. வடஇந்தியா முழுவதையும் உள்ளடக்கிய ஒரு பெரும் பேரரசை நந்தர்கள் உருவாக்கினர்.
நந்தவம்சத்தின் வலிமைமிக்க ஆட்சியாளர் மகாபத்மநந்தர். வடஇந்தியாவிலிருந்த ஷத்திரிய வம்சத்தவர்களை முறியடித்த அவர் ஏகரதன் என்ற பட்டத்தை சூட்டிக் கொண்டார்.- மகாபத்ம நந்தரின் விரிவான படையெடுப்புகள்பற்றி புராணங்கள் குறிப்பிடுகின்றன. நந்தர்கள் கலிங்க நாட்டை கைப்பற்றியதாக காரவேலனின் ஹதிகும்பா கல்வெட்டு குறிப்பிடுகிறது. தக்காணத்தின் பெரும்பகுதி நந்தர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது என பல வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர். எனவே மகாபத்ம நந்தர் ஒரு பரந்த பேரரசை உருவாக்கினார் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
நந்தர்கள் அரசு
புத்த சமய சான்றுகள்படி மகாபத்ம நந்தர் பத்து ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். அவரைத் தொடர்ந்து அவரது எட்டு புதல்வர்களும் ஒருவர்பின் ஒருவராக மகதத்தை ஆட்சி செய்தனர். நந்தவம்சத்தின் கடைசி அரசர் தனநந்தர். மகதப் பேரரசை கட்டுக்குலையாமல் அவர் காப்பாற்றினார். ஏராளமான செல்வத்தையும், வலிமைமிக்க படையையும் அவர் வைத்திருந்தார். நந்தர்களின் செல்வச் செழிப்பு பற்றி சங்க இலக்கியமான அகநாணூற்றில் மாமூலனார் பாடியுள்ளார். நந்தர்களின் ஆட்சிப் பகுதியில் நிலவிய வளமான வேளாண்மையும் பொதுவான செல்வச் செழிப்பும் அரசுக் கருவூலத்தை நிரப்பியிருந்திருக்க வேண்டும். தனநந்தன் பின்பற்றிய கடுமையான வரிவசூல் முறையை மக்கள் எதிர்த்தனர். இதனைச் சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சந்திரகுப்த மௌரியனும், கௌடில்யரும் நந்தர்களின் ஆட்சிக்கு எதிராக ஒரு மக்கள் எழுச்சியை தோற்றுவித்தனர். இக்காலத்தில்தான் அலெக்சாண்டர் இந்தியாவின்மீது படையெடுத்தார்.