1892 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய கவுன்சில்கள் சட்டத்தை இந்திய தேசிய காங்கிரகக்கு கிடைத்த முதல் வெற்றி என்று கருதலாம். மத்திய சட்டமன்றலிருந்த கூடுதல் உறுப்பினர்களின் எண்ணிக்கையை இச்சட்டம் மேலும் உயர்த்தியது. அவர்களது எண்ணிக்கை குறைந்தது பத்து என்றும் அதிகபட்சம் பதினாறு என்றும் நிர்ணயிக்கப்பட்டது. அலுவலர் அல்லாதோரின் விகிதமும் அதிகரிக்கப்பட்டது. 16 பேரில் 6 பேர் அலுவலர்கள். 10 பேர் அலுவலர் அல்லாதவர்கள். அரசின் வரவு, செலவு அறிக்கை மற்றும் நிதிக்கொள்கை பற்றி விவாதிக்க கூடுதல் உறுப்பினர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதேபோல் மாகாண சட்டமன்றங்களிலும் கூடுதல் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. கூடுதல் அதிகாரமும் வழங்கப்பட்டது.
மின்டோ - மார்லி சீர்திருத்தங்கள்
1909 ஆம் ஆண்டு இந்திய கவுன்சில்கள் சட்டம் மின்டோ - மார்லி சீர்திருத்தங்கள் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவுக்கான அயலுறவுச் செயலர் மார்லி பிரபு, இந்தியாவின் தலைமை ஆளுநர் மின்டோ பிரபு. இவ்விருவரும் இச்சட்டம் கொண்டு வரப்படுவதற்கு காரணமாக இருந்தனர். காங்கிரசிலிருந்து மிதவாதிகளை திருப்திப்படுத்தும் நோக்கத்துடன் இச்சட்டம் நினறவேற்றப்பட்டது. இச்சட்டத்தின் முக்கிய பிரிவுகள்:
1. மத்திய சட்டசபையிலிருந்த கூடுதல் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகபட்சம் 60 ஆக உயர்த்தப்பட்டது. இவர்களில் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 27 ஆகும். மீதமுள்ள நியமிக்கப் பட்டவர்கள் 33 பேரில் 28 பேர்களுக்குமேல், அதிகாரிகள் இருக்கக் கூடாது என்று விதிக்கப்பட்டது.
2. சட்டமன்றங்களுக்கு தேர்தல் என்ற கருத்து சட்டபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால், முஸ்லீம்களுக்கு சாதகமாக இருக்கும் பொருட்டு முதன்முறையாக வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் கொண்டுவரப்பட்டது. முஸ்லிம்களுக்கு தனித்தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
3. பெரிய மாகாணங்களின் சட்டமன்றங்களில் இருந்த கூடுதல் உறுப்பினர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்த்தப்பட்டது.