அரசியல் பண்புகளில் மிகவும் உயரிய மற்றும் செம்மையான பண்பு தலசுய ஆட்சி என்பது ரிப்பன் பிரபுவின் நம்பிக்கையாகும். ஆகவே நகரங்களில் நகரசபை குழுக்கள், தாலுக்காக்கள் மற்றும் கிராமங்களில் உள்ளாட்சி கழகங்கள் போன்ற உள்ளாட்சி அமைப்புகளை அவர் போற்றி வளர்த்தார். நகரசபைகளின் அதிகாரங்கள் மேலும் அதிகரிக்கப்பட்டன. அவற்றின் தலைவர்கள் அதிகாரிகள் அல்லாதவர்களாக இருக்கவேண்டும். சுகாதாரம், கழிவுநீர் சுத்திகரிப்பு, குடிநீர் வழங்குதல், தொடக்கக்கல்வி போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி நிர்வகிக்கும் பொறுப்பு நகரசபைகளிடம் வழங்கப்பட்டது. மாவட்ட மற்றும் தாலுக்கா கழகங்கள் உருவாக்கப்பட்டன. இந்த கழகங்களின் பெரும்பான்மை உறுப்பினர்கள் அதிகாரிகள் அல்லாதவர்களாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
உள்ளாட்சி அமைப்புகள் தங்களிடமிருந்த நிதி ஆதாரங்களைப் பொறுத்தவரை முழு அதிகாரம் பெற்று விளங்கின. இந்தியாவின் ஆட்சியதிகாரம் படிப்படியாக படித்த இந்தியர்களின் கைக்கு மாற்றப்பட வேண்டும் என்பது ரிப்பனின் விருப்பமாக இருந்திருக்கலாம். அரசாங்க நியமனங்களுக்குப் பதில் உள்ளாட்சி கழகங்களுக்கு தேர்தல்கள் மூலம் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்று ரிப்பன் வலியுறுத்தினார்.
நிர்வாகத்தில் திறமையைப் புகுத்துவது ரிப்பனின் முக்கிய நோக்கமல்ல மாறாக நிர்வாகம் பரவலாக்கப்பட்டு மக்களுக்கு நெருக்கமானதாக மாற்றப்படவேண்டும் என்று அவர் கருதினார். தல சுய ஆட்சியே ரிப்பனின் மகத்தான சாதனையாகும். இன்று நாட்டில் காணப்படும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடித்தளம் அமைத்தவர் ரிப்பன் பிரபு ஆவார்.