அரசியல் காரணங்கள்
மக்களின் மனக்குறையும் அமைதியின்மையும் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிரான கலகங்களாக வெடித்தன. இவை ஆட்சியாளர்கள் மற்றும் அரச குடும்பங்களை மட்டும் சார்ந்தது எனக் கூறமுடியாது. மாறாக எந்தவொரு பகுதியில் பிரிட்டிஷ் அரசு காலூன்றினாலும் பிரிட்டிஷ் ஆட்சியை அப்பகுதி மக்கள் விரும்பவில்லை. குறிப்பாக பிரிட்டிஷ் பேரரசுடன் நீதிக்குப்புறம்பான வகையில் இணைத்துக் கொள்ளப்பட்ட பர்மா, அஸ்ஸாம், குடகு, சிந்து, பஞ்சாப் போன்ற பகுதிகளில் பிரிட்டிஷ் எதிர்ப்புணர்வு அதிகமாக காணப்பட்டது. வாரிசு இழப்பு கொள்கையும் அதனை டல்ஹவுசி பிரபு நடைமுறைப்படுத்திய விதமும் அதனால் நேரடியாக பாதிக்கப்பட்ட இந்திய ஆட்சியாளர்களிடையே தீராத மனக்குறையையும் அச்சத்தையும் தோற்றுவித்தது.
பொருளாதாரக் காரணங்கள்
செல்வச் சுரண்டல், தொழில் நலிவு, அதிகரிக்கப்பட்ட நிலவரி ஆகியவையே 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் காணப்பட்ட பொதுவான இந்தியப் பொருளாதார நிலையாகும். கிழக்கிந்திய வணிகக்குழு அரசியல் சக்தியாக மாறிய பிறகு, இந்தியர்களின் நலனுக்கு குந்தகமாக அதனை தங்களது வணிக முன்னேற்றத்துக்கு பயன் படுத்திக் கொண்டது. பிரிட்டனில் இந்தியப் பொருட்களின் மீது அதிக வரிகளை விதித்து இந்திய வணிகத்தையும் தொழிலையும் ஒருபுறம் அழித்தனர். இந்தியாவிற்குள் பெருமளவு பிரிட்டிஷ் பொருட்கள் கொண்டுவந்து குவித்து இந்தியத் தொழிலை மேலும் சீரழித்தனர்.
இங்கிலாந்தில் தொழிற்புரட்சியின்போது கைத்தறி நெசவாளர்கள் பாதிக்கப்பட்டனர். ஆனால் கூடவே இயந்திரத் தொழில்கள் வளர்ச்சியடைந்தமையால் அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. ஆனால், இந்தியாவில் கைத்தொழில் நசிந்து ஆயிரக்கணக்கான கைவினை கலைஞர்கள் வேலையிழந்து தவித்தபோது, புதிய தொழிலமைப்புகள் ஏதும் உருவாக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.