கீதையையும்விட இன்னும் அதிகக் கவனத்துடன் அந்நூலைப் படித்தேன். படிக்கக் கையில் எடுத்துவிட்டால் பிறகு அதைக் கீழே வைத்துவிட முடிவதில்லை. அச்சகோதரர்கள் ஒரு சமயம் என்னைப் பிளாவட்ஸ்கி விடுதிக்கு அழைத்துச் சென்று, பிளாவட்ஸ்கி அம்மையாரையும் ஸ்ரீமதி பெஸன்டையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தனர்.ஸ்ரீமதி பெஸன்ட் அப்பொழுதுதான் பிரம்மஞான சங்கத்தில் சேர்ந்திருந்தார். அவர் இவ்விதம் மாறிவிட்டதைக் குறித்து நடந்த வாதப் பிரதிவாதங்களைச் சிரத்தையுடன் கவனித்து வந்தேன். இச்சங்கத்தில் சேரும்படி நண்பர்கள் எனக்கும் யோசனை கூறினர். ‘ என் மதத்தைப் பற்றியே நான் இன்னும் சரியாகத் தெரிந்து கொள்ளாமல் இருக்கும்போது மத சம்பந்தமான எந்த ஒரு ஸ்தாபனத்திலும் சேர நான் விரும்பவில்லை’ என்று மரியாதையுடன் கூறி, மறுத்து விட்டேன். அந்தச் சகோதரர்கள் சொன்னதன் பேரில் பிளாவட்ஸ்கி அம்மையார் எழுதிய, ‘ பிரம்மஞானத் திறவு கோல் ’ என்னும் நூலை நான் படித்ததாகவும் எனக்கு நினைவு இருக்கிறது. ஹிந்து சமயத்தைப் பற்றிய நூல்களைப் படிக்கும் ஆர்வத்தை இந்நூல் எனக்கு ஊட்டியது. ஹிந்து சமயத்தில் மூடநம்பிக்கைகளே மலிந்து கிடக்கின்றன என்று பாதிரிகள் செய்த பிரச்சாரத்தினால் எனக்கு உண்டாகியிருந்த தவறான எண்ணத்தையும் இந்நூல் போக்கியது.
அதே சமயத்தில் மான்செஸ்டரிலிருந்து வந்த ஓர் உத்தமமான கிறிஸ்தவரை சைவ உணவு விடுதி ஒன்றில் நான் சந்தித்தேன். கிறிஸ்தவத்தைப் பற்றி அவர் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். ராஜ்கோட்டில் கிறிஸ்தவப் பாதிரிமார் நடத்தி வந்த பிரச்சாரத்தைக் குறித்த என்னுடைய பழைய நினைவுகளை அவரிடம் கூறினேன். அதைக் கேட்டு, அவர் மனவேதனை அடைந்தார். ‘ நான் சைவ உணவு மாத்திரமே சாப்பிடுபவன் ; மதுபானமும் அருந்துவதில்லை. கிறிஸ்தவர்கள் அநேகர் மாமிசம் சாப்பிடுகிறார்கள் ; குடிக்கிறார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், மது, மாமிசம் சாப்பிடும்படி எங்கள் வேதம் சொல்லவில்லை; தயவுசெய்து பைபிளைப் படியுங்கள்’ என்றார். அவருடைய யோசனையை ஏற்றுக் கொண்டேன். அவர் எனக்குப் பைபிள் பிரதி ஒன்றும் வாங்கிக்கொடுத்தார். அவரே பைபிள் பிரதிகளை விற்று வந்ததாகவும், படங்கள், அரும்பத அகராதி முதலிய விளக்கங்கள் அடங்கிய ஒரு பைபிள் பிரதியை அவரிடம் நான் வாங்கியதாகவும் எனக்குக் கொஞ்சம் நினைவிருக்கிறது. அதைப் படிக்க ஆரம்பித்தேன். ஆனால், பழைய ஏற்பாட்டைப் படித்துப் புரிந்துகொள்ள என்னால் இயலவில்லை. ஆதி ஆகமத்தையும் அதையடுத்த அத்தியாயங்களையும் படிக்க ஆரம்பித்ததுமே எனக்குத் தூக்கம் வந்துவிடும். ஆனால், பைபிளைப் படித்திருக்கிறேன் என்று