அச்சமயம் பிளேக் நோய் பரவி இருந்ததால் வீரம் காமிலோ அல்லது வத்வானிலோ - எந்த ஊர் என்பதை மறந்துவிட்டேன்- மூன்றாம் வகுப்புப் பிரயாணிகளை வைத்தியப் பரிசோதனை செய்து வந்தனர். எனக்குச் சுரம்கொஞ்சம் இருந்தது. எனக்குச் சுரம் இருக்கிறது என்பதை இன்ஸ்பெக்டர் கண்டதும் ராஜ்கோட் வைத்திய அதிகாரியிடம் போய் ஆஜராகும்படி என்னிடம் கூறி என் பெயரையும் பதிவு செய்துகொண்டார்.
நான் வத்வான் வழியாகப் போய்க்கொண்டிருக்கிறேன் என்று யாரோ சொல்லியிருக்கவேண்டும். ஏனெனில், அவ்வூரில் பிரபல பொதுஜன ஊழியரும், தையற்காரருமான மோதிலால் ஸ்டேஷனுக்கு வந்து என்னைப் பார்த்தார். வீரம்காம் சுங்க வரியைப்பற்றி அவர் என்னிடம் சொன்னார். அதனால், ரெயில்வேப் பிரயாணிகள் அனுபவிக்க வேண்டியிருக்கும் துயரங்களையும் கூறினார். எனக்குச் சுரம் இருந்ததால், பேசுவதற்கே எனக்கு விருப்பமில்லை. சுருக்கமாகப் பதில் சொல்லிவிட முயன்றேன். என்னுடைய பதில் ஒரு கேள்வியாக அமைந்தது. “சிறை செல்ல நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?” என்பதே என்னுடைய கேள்வி.
தாங்கள் பேசுவது இன்னதென்பதைச் சிந்திக்காமலேயே சிலர் பேசிவிடுவார்கள். அப்படிப்பட்ட ஆவேச உணர்ச்சியுள்ள வாலிபர்களில் மோதிலாலும் ஒருவர் என்று நான் எண்ணினேன். ஆனால், அவர் அப்படிப்பட்டவர் அன்று. உறுதியுடன் தீர்மானமாக அவர் பின்வருமாறு பதில் கூறினார்:
“நீங்கள் எங்களுக்குத் தலைமை வகித்து இயக்கம் நடத்துவதாயின் நாங்கள் நிச்சயமாகச் சிறை செல்வோம். கத்தியவாரைச் சேர்ந்தவர்கள் என்ற முறையில் எங்களுக்கு உங்கள் மீது முதல் உரிமை உண்டு. என்றாலும், இப்பொழுது