நான் கண்டுபிடித்துவிட்டதைக் குறித்து லேடி செஸிலியாவுக்கு அறிவித்து அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டேன். அவரோ, தமது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்ள விரைந்தோடி வந்தார். அவருக்குச் சொன்ன நண்பர், புட்டிமீது ஒட்டியிருந்த சீட்டைப் படித்துப் பார்க்கவே இல்லை. இதைக் குறித்து கவலைப்படவே வேண்டாம் என்று அவரை மிகவும் வேண்டிக் கொண்டேன். எவ்வளவோ சிரமப் பட்டுத் தேடிக்கொண்டு வந்தவைகளை நான் பயன்படுத்திக் கொள்ள முடியாமைக்கு என் வருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டேன். தெரியாததனால் தவறாகப் பால் சாப்பிட்டு விட்டதற்காக, குற்றம் செய்து விட்டதாக எண்ணி நான் வருத்தப் படவில்லை என்றும் அவருக்கு உறுதி கூறினேன்.
லேடி செஸிலியாவுடன் ஏற்பட்ட தொடர்பைப் பற்றிய மற்றும் பல இனிய ஞாபகங்களெல்லாம் உண்டு. அவற்றையெல்லாம் கூறாமல் மேலே செல்ல வேண்டியவன் ஆகிறேன். எத்தனையோ சோதனைகளுக்கும் ஏமாற்றங்களுக்கும் இடையே எனக்குப் பெரும் ஆறுதல் அளிப்பவர்கள் ஆக இருந்து வந்த அநேக நண்பர்களைப் பற்றி நான் எண்ணிப் பார்க்க முடியும். இவ்விதம் கடவுள், துயரங்களையும் இன்பமானவைகளாக்கி விடுகிறார். இதில் நம்பிக்கையுள்ளவர்கள், கருணைக் கடலான கடவுளின் அந்த அருளையே அந்நண்பர்களிடமும் காண்பார்கள்.
டாக்டர் அல்லின்ஸன் அடுத்த முறை என்னைப் பார்க்க வந்த போது, ஆகாரத்தில்எனக்கு விதித்திருந்த கட்டுத் திட்டங்களைத் தளர்த்தி விட்டார். கொழுப்புச்சத்துக்காக நிலக்கடலை, வெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் சேர்த்துக் கொள்ளும் படியும், கறிகாய்களைச் சமைத்து, நான் விரும்பினால் அரிசிச்