‘இந்தியன் ஒப்பீனியனின் ஓர் இதழை மாத்திரமே வெளியில் மெர்க்குரி அச்சகத்தில் அச்சிடவேண்டியிருந்தது.
சம்பாதிக்கும் நோக்கத்தோடு இந்தியாவிலிருந்து என்னுடன் தென்னாப்பிரிக்காவுக்கு வந்திருந்த என் உறவினர்களையும் நண்பர்களையும் போனிக்ஸு க்கு இழுத்துவிட இப்பொழுது முயன்றேன். அவர்கள் பல வகையான வியாபாரங்களில் ஈடுபட்டிருந்தவர்கள். அவர்கள் செல்வம் திரட்ட வந்தவர்களாகையால் அவர்களை இங்கே வந்துவிடும்படி செய்வது மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆனால், சிலர் ஒப்புக்கொண்டார்கள். அப்படி ஒப்புக்கொண்டவர்களில் மகன்லால் காந்தியின் பெயரை மாத்திரம் நான் முக்கியமாகக் கூறுவேன். மற்றவர்கள் திரும்பவும் வியாபாரம் செய்யப் போய்விட்டனர். மகன்லால் காந்தி மட்டும் வியாபாரத்திற்கு முழுக்குப் போட்டுவிட்டு என்னோடு வந்து சேர்ந்து கொண்டார். தார்மிகத்துறையில் நான் செய்த சோதனைகளில் என் ஆரம்ப சக ஊழியர்களாக இருந்தவர்கள் சிலர் உண்டு. அவர்களுள், திறமையிலும் தியாகத்திலும் பக்தியிலும் தலைசிறந்து விளங்கியவர் இவரே. கைத்தொழில்களை இவர் தாமே கற்றுக்கொண்டார். அதனால், கைத்தொழிலாளிகளிடையே இவர் வகித்த ஸ்தானம் இணையில்லாதது.
இவ்விதம் போனிக்ஸ் குடியிருப்பு 1904-இல் ஆரம்பமாயிற்று. எவ்வளவோ கஷ்டங்களெல்லாம் ஏற்பட்டபோதிலும் ‘இந்தியன் ஒப்பீனியன்’ அங்கிருந்தே பிரசுரிக்கப்பட்டு வருகிறது.