இந்த ஆடை, அலங்காரங்களெல்லாம் அவர்களுடைய அடிமைத்தனத்தின் சின்னங்களேயன்றி அவர்களது ராஜ சின்னங்கள் அல்ல என்பதைக் கண்டேன். தங்களுடைய பேடித்தனத்தைக் காட்டும் இப்பட்டையங்களையெல்லாம் இவர்கள் தங்கள் இஷ்டப்படி விரும்பி அணிந்திருந்தார்கள் என்று நான் எண்ணியிருந்தேன். ஆனால், இந்த ராஜாக்கள் தங்களுடைய ஆபரணங்களையெல்லாம் இத்தகைய வைபவங்களுக்கு அணிந்துகொண்டு வர வேண்டும் என்பது கட்டாயம் என்பதைப் பின்னால் அறிந்துகொண்டேன். இப்படி நகைகளையெல்லாம் அணிவதைச் சில ராஜாக்கள் மனப்பூர்வமாக வெறுக்கின்றார்கள் என்பதையும், இந்தத் தர்பார் போன்ற சமயங்களில் அல்லாமல் வேறு எப்பொழுதுமே அவைகளை அவர்கள் அணிவதில்லை என்பதையும் அறிந்தேன்.
எனக்குக் கிடைத்த இந்த விவரங்கள் எவ்வளவு தூரம் உண்மையானவை என்பது எனக்குத் தெரியாது. ஆனால், மற்றச் சமயங்களிலும் அவைகளை அவர்கள் அணிந்தாலும், அணியாது போயினும், சில பெண்கள் மாத்திரமே அணியக்கூடிய நகைகளை அணிந்து கொண்டுதான் அவர்கள் வைசிராயின் தர்பாருக்குப் போகவேண்டியிருக்கிறது என்பது ஒன்றே மனத்தை நோகச் செய்வதற்குப் போதுமானதாகும்.
செல்வம், அதிகாரம், அந்தஸ்து ஆகியவைகளுக்காக மனிதன் எவ்வளவு பெரிய பாவங்களையும், அநீதிகளையும் செய்ய வேண்டியவனாகிறான்!
17 கோகலேயுடன் ஒரு மாதம் - 1 |
நான் கோகலேயுடன் வசிக்க ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே என் சொந்த வீட்டில் வசிப்பதுபோல் நான் உணரும்படி அவர் செய்துவிட்டார். தமது சொந்தத் தம்பியைப் போன்றே பாவித்து அவர் என்னை நடத்தினார். என் தேவைகள் யாவை என்பதை எல்லாம் அறிந்து கொண்டார். எனக்கு வேண்டியவை யாவும் கிடைக்கவும் ஏற்பாடு செய்தார். அதிர்ஷ்டவசமாக எனக்குள்ள தேவைகளோ மிகக் கொஞ்சம். அதோடு எனக்கு வேண்டியதை எல்லாம் நானே செய்துகொள்ளுவது என்ற பழக்கத்தையும் வளர்த்துக்கொண்டிருந்தேன். ஆகையால், வேலைக்காரரின் உதவி