தாதா அப்துல்லாவின் வழக்குக்கு வேண்டிய காரியங்களை நான் பார்த்துக்கொண்டிருந்தபொழுது, ஒரு வழக்கில் விவரங்களே அதிக முக்கியமானவை என்பதை நான் முற்றும் உணர்ந்து கொள்ளவில்லை. விவரங்கள் என்பவை, உண்மையாக நடந்த செயல்களாகும். நாம் உண்மையை அனுசரித்துப் போனால் இயற்கையாகவே சட்டம் நம் உதவிக்கு வருகிறது. தாதா அப்துல்லாவின் வழக்கில், விவரங்கள் மிகவும் அனுகூல மானவைகளாக இருந்ததால் சட்டமும் நிச்சயமாக அவருக்கு அனுகூலமாகவே இருக்கும் என்பதைக் கண்டேன். வாதியும் பிரதிவாதியும் உறவினர்கள். இருவரும் ஒரே ஊர்க்காரர்கள். ஆனால், விவகாரம் தொடர்ந்து நடத்தப்படுமானால், இரு தரப்பினருமே அழிந்துவிடுவார்கள் என்பதையும் கண்டு கொண்டேன். வழக்கு எவ்வளவு காலத்திற்கு நடந்து கொண்டு போகும் என்பது யாருக்கும் தெரியாது. ‘கோர்ட்டில் வழக்காடி ஒரு முடிவுக்கு வந்தே தீருவது’ என்று, வழக்கைத் தொடர்ந்து நடக்க விட்டுவிட்டால் காலவரையறையின்றி அது நடந்து கொண்டே போகும். இதனால் இரு தரப்பாருக்கும் நன்மை இல்லை. ஆகையால், வழக்கு உடனேயே தீர்ந்துவிடுவது நல்லது என்று இரு தரப்பாரும் விரும்பினார்கள்.
தயாப் சேத்திடம் போய், வழக்கை மத்தியஸ்தத்திற்கு விட்டுத் தீர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டு யோசனையும் கூறினேன். அவர் வக்கீலிடமும் அதைக் குறித்து யோசிக்கும்படியும் சொன்னேன். இரு தரப்பினருக்கும் நம்பிக்கை வாய்ந்த ஒருவரை மத்தியஸ்தராக நியமித்து விட்டால் வழக்கு சீக்கிரத்தில்