இந்த வாதம் எனக்குக் கொஞ்சமும் திருப்தியளிப்பதாக இல்லை. எனவே, பணிவுடன் பின்வருமாறு பதில் சொன்னேன்: “எல்லாக் கிறிஸ்தவர்களும் அங்கீகரிக்கும் கிறிஸ்தவம் இதுவேயாயின், இதை நான் ஏற்றுக்கொள்ள முடியாது. என்னுடைய பாவங்களின் விளைவுகளிலிருந்து விமோசனம் பெற்றுவிட வேண்டும் என்று நான் நாடவில்லை. பாவத்திலிருந்தே, அதாவது பாவ எண்ணத்தில் இருந்தே விமோசனம் பெறுவதைத்தான் நான் நாடுகிறேன். அந்த லட்சியத்தை நான் அடையப்பெறும் வரையில் அமைதியின்றி இருப்பதில் திருப்தியடைவேன்”.
நான் இவ்வாறு கூறியதற்குப் பிளிமத் சகோதரர், “உங்கள் முயற்சி பயனற்றது என்று நான் உறுதியாகக் கூறுகிறேன். நான் கூறியதைக் குறித்து, நீங்கள் மீண்டும் சிந்தித்துப் பாருங்கள்” என்றார்.
அந்தச் சகோதரர் சொன்னதற்கு ஏற்பவே அவருடைய செயலும் இருந்தது. அறிந்தே அவர் தவறுகளைச் செய்தார். அத் தவறுகளைப் பற்றிய எண்ணம் தம்மைக் கவலைக்கு உள்ளாக்கி விடவில்லை என்பதையும் எனக்குக் காட்டி விட்டார்.
ஆனால், தவறுகளைப்பற்றிய இத்தகைய சித்தாந்தத்தை எல்லாக் கிறிஸ்தவர்களுமே நம்பிவிடவில்லை என்பதை இந்த நண்பர்களைச் சந்திப்பதற்கு முன்பே நான் அறிவேன். ஸ்ரீ கோட்ஸ், தம்மைப் பொறுத்தவரையில் கடவுளுக்குப் பயந்தே நடந்து வந்தார். அவருடைய உள்ளம் தூய்மையானது, நமக்கு நாமே தூய்மை அடைவது சாத்தியம் என்பதில் அவருக்கு நம்பிக்கை உண்டு. ஹாரிஸ், காப் என்ற அவ்விரு பெண்களுக்கும் இதே நம்பிக்கை இருந்தது. நான் படித்த புத்தகங்களில் சில பக்தி ரசம் மிகுந்தவை. ஆகவே, எனக்கு ஏற்பட்ட கடைசி அனுபவத்தைக் கொண்டு ஸ்ரீ கோட்ஸ் அதிகக் கவலை அடைந்து விட்டார். என்றாலும், பிளிமத் சகோதரர் கொண்ட தவறான நம்பிக்கையினால் கிறிஸ்தவத்தைக் குறித்து எனக்கு வெறுப்பு ஏற்பட்டுவிடாது என்று நான் ஸ்ரீ கோட்ஸூக்கு கூறியதோடு அவருக்கு உறுதியளிக்கவும் என்னால் முடிந்தது.
எனக்குக் கஷ்டங்களெல்லாம் வேறு இடத்திலேயே ஏற்பட்டன. பைபிளையும், பொதுவாக அதற்கு ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் வியாக்கியானத்தையும் பற்றியவையே அவை.
11. இந்தியருடன் தொடர்பை நாடினேன் |
கிறிஸ்தவர்களுடன் ஏற்பட்ட பழக்கத்தைக் குறித்து மேற் கொண்டும் எழுதுவதற்கு முன்னால், அதே சமயத்தில் எனக்கு உண்டான மற்ற அனுபவங்களையும் நான் குறிப்பிட வேண்டும்.
நேட்டாலில் தாதா அப்துல்லாவுக்கு என்ன அந்தஸ்து