அப் பெண்மணியின் வீட்டிற்கு என்னை அவர் அழைத்துச் சென்றார். என்னைக் குறித்து தனியாக அவரிடம் பேசினார். வாரத்திற்கு 35 ஷில்லிங் கொடுத்துச் சாப்பிட்டுக் கொண்டு, நான் அங்கே தங்குவதற்கு அப்பெண் சம்மதித்தார்.
ஸ்ரீ பேக்கர், அட்டர்னித் தொழில் செய்து வந்ததோடு மத சம்பந்தமான பிரசங்கங்களும் செய்து வந்தார். அவர் இன்னும் உயிருடன் இருக்கிறார். இப்போது சட்டத் தொழிலை விட்டு விட்டு மதப்பிரசாரம் மட்டும் செய்துகொண்டிருக்கிறார். அவருக்கு நல்ல சொத்து உண்டு. இப்பொழுதும் எனக்குக் கடிதங்கள் எழுதுகிறார். எழுதும் கடிதங்களிலெல்லாம் ஒரே விஷயத்தையே எழுதிக்கொண்டு வருகிறார். எந்த வகையில் கவனித்தாலும் கிறிஸ்தவ சமயம் ஒன்றே எல்லாவற்றிலும் சிறந்தது என்கிறார். ஏசுநாதர் ஒருவரையோ கடவுளின் திருக்குமாரர், அவரே மனித வர்க்கத்தின் ரட்ஷகர் என்பதை ஒப்புக்கொள்ளாத வரையில் நிரந்தரமான சாந்தியை அடையவே முடியாது என்று வாதிக்கிறார்.
ஸ்ரீ பேக்கரை நான் முதல் முறை சந்தித்துப் பேசியபோதே, மத சம்பந்தமான என்னுடைய கருத்துக்களைப்பற்றி அவர் விசாரித்தார். நான் அவருக்கு பின்வருமாறு சொன்னேன்: “பிறவியினால் நான் ஹிந்து என்றாலும் ஹிந்து தருமத்தைப்பற்றி எனக்கு இன்னும் அதிகமாகத் தெரியாது. மற்ற மதங்களைக் குறித்துத் தெரிந்திருப்பதோ அதைவிடவும் குறைவு. உண்மையில், மத சம்பந்தமாக என் நிலை என்ன? என் நம்பிக்கை எதுவாக இருக்க வேண்டும்? என்பதையே நான் அறிவேன். என் சொந்த மதத்தைக் குறித்துக் கவனமாகப் படிக்க விரும்புகிறேன். முடிந்த வரையில் பிற சமயங்களைக் குறித்தும் படிக்க எண்ணுகிறேன்.”