இந்தப் புத்திமதி, விஷம்போல எனக்குக் கசப்பாகவே இருந்தது என்றாலும் இதை நான் விழுங்கியே ஆக வேண்டியதாயிற்று. அவமானத்தைச் சகித்துக்கொண்டேன். அதனால் பலனையும் அடைந்தேன். இனி ஒருக்காலும் இத்தகைய சங்கடமான நிலைக்கு என்னை உட்படுத்திக்கொள்ள மாட்டேன் ; நட்பை இவ்விதம் பயன்படுத்திக் கொள்ளவும் முயலமாட்டேன் என்று எனக்குள் நானே சொல்லிக் கொண்டேன். அதன்பின் இந்த உறுதியிலிருந்து மாறும் குற்றத்தை நான் செய்ததே இல்லை. இந்த அதிர்ச்சி என் வாழ்க்கையில் போக்கையே மாற்றிவிட்டது.
5. ஆப்பிரிக்கா செல்ல ஏற்பாடு |
அந்த அதிகாரியிடம் நான் போனதே தவறு என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவர் காட்டிய பொறுமையின்மையும் அளவு கடந்த கோபமும், என் தப்புக்கு மிகவும் அதிகப் படியானவையே. வெளியில் பிடித்துத் தள்ள வேண்டியதற்கான தப்பை நான் செய்துவிடவில்லை. அவருடைய நேரத்தில், நான் சொன்னதைக் கேட்க, ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஆகியிராது. ஆனால், நான் பேசியதே அவருக்குப் பொறுக்கவில்லை. போய்விடும்படி அவர் மரியாதையாக எனக்குச் சொல்லியிருக்கலாம். ஆனால், அவருக்கு அளவுக்கு மீறி அதிகார போதை இருந்தது. பொறுமை என்ற குணத்திற்கும் இந்த அதிகாரிக்கும் வெகு தூரம் என்பது எனக்குப் பின்னால் தெரிந்தது. தம்மைப் பார்க்க வருகிறவர்களை அவமதிப்பதே அவருக்குப் பழக்கமாம். அவருடைய விருப்பத்திற்கு மாறாக ஏதேனும் அற்பக் காரியம் நடந்துவிட்டாலும் அவருக்குக் கோபாவேசம் வந்துவிடுமாம். இப்பொழுதே என் வேலைகளில் பெரும்பாலும் அவருடைய நீதிமன்றத்தில் நடந்தாக வேண்டியவை. அவரைச் சமாதானப் படுத்துவது என்பதும் என்னால் ஆகாதது. எப்படியாவது அவருடைய தயவைத் தேடிக்கொள்ள வேண்டும் என்ற விருப்பமும் எனக்கு இல்லை. உண்மையில் அவர் மீது வழக்குத் தொடருவதாக நான் ஒரு முறை அவரைப் பயமுறுத்திவிட்ட பிறகு, சும்மா, இருந்துவிட நான் விரும்பவில்லை. இதற்கு மத்தியில் நாட்டின் சில்லரை ராஜீய விஷயங்களைக் குறித்தும் கொஞ்சம் தெரிந்துகொண்டேன். கத்தியவார் அநேக சிறு சிறு சமஸ்தானங்களைக் கொண்ட பகுதியாகையால், ராஜீயவாதிகள் ஏராளமாக முளைத்துக் கொண்டிருந்தனர். சமஸ்தானங்கள் ஒன்றுக்கொன்று சூழ்ச்சிகளில் ஈடுபடுவதும்