நலமொன்றும் இல்லாத நாரியரைக் கூடிப்
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போலப்
பொலபொலலெனக் கலகலெனப்
புதல்வர்களைப் பெறுவீர்
காப்பதற்கும் வழியறியீர் கைவிடவும் மாட்டீர்
கவர்பிளந்த மரத்துளையில் கால்
நுழைத்துக்கொண்டு
ஆப்பதனை அசைத்திட்ட குரங்கதனைப் போல
அகப்பட்டீர் கடந்துழல அகப்பட்டீர் நீரே!
- பட்டினத்தார்.
`ஏ மனிதர்களே! நாக்கே பிளந்துவிடும்படியாகப் பொய் பேசுவீர்கள்!
புதிய புதிய செல்வங்களைத் தேடுவீர்கள்!
பூமியைப் பிளந்துக்கொண்டு வருகின்ற புற்றீசல் போலப் பொல பொலவென்று கலகலவென்று பிள்ளைகளைப் பெறுவீர்கள்!
காப்பதற்கும் உங்களுக்கு வழி தெரியாது; அவர்களைக் கைவிடவும் மாட்டீர்கள்.
பாதி பிளந்து ஆப்பு வைக்கப்பட்ட மரத்துளையில் காலை வைத்துக்கொண்டே ஆப்பைப் பிடுங்குகிற குரங்கு, மரத்துளையில் கால் மாட்டிக் கொண்டு திண்டாடுவது போல பந்த பாசத்தில் கிடந்து உழலுவீர்கள்!’ என்று சிரிப்போடு சொல்கிறார் பட்டினத்தார்.
தொட்ட பின்பே பாம்பு என்றறியும் மனிதர்கள்… -
சுட்ட பிறகே நெருப்பென்றறியும் அப்பாவிகள் -
அவர்கள் பட்ட பின்புமே கெட்ட பின்புமே பரம்பொருளை நினைக்கிறார்கள்.
ஆரம்பத்திலிருந்தே வாழ்வை வகுத்துக்கொள்ள அவர்களால் முடிவதில்லை.
ராமலிங்க வள்ளலாரைப் போலவோ, ராமகிருஷ்ண பரமஹம்சரைப் போலவோ, சுவாமி விவேகானந்தரைப் போலவோ, இளம் பருவத்திலே ஞான ஒளியைப் பெற அவர்களால் முடியவில்லை.
`ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே!’
சாட்டை இல்லாப் பம்பரம் போல் ஆட்டி வைக்கிறான் கண்ணன்.
`உண்டு, உண்டு’ என்று ஓடி, பிறகு `இல்லை, இல்லை’ என்று ஏமாந்து, `எங்கே எங்கே’ என்று தேடி, `இதோ, இங்கே இங்கே’ என்று கண் மயங்கி, வெட்ட வெளிப் பொட்டலிலே விட்டெறிந்த பந்தினைப்போல், `ஆடி ஓடி அமர்ந்தேன் பராபரமே!’ என்று அமர்ந்து விடுகிறார்கள்.
அனுபவங்களுக்குப் பிறகுதான் உண்மை அவர்களுக்குத் தெரிகிறது.
அந்த உண்மையை ஆரம்பத்திலேயே கண்டு கொள்வதெப்படி?
இது இன்றைய இளைஞனுக்குச் சொல்லவேண்டிய பாடம்.
குத்திய பின்பே முள்ளென்று அறியாமல், `இது முள்’ என்று பார்வையிலேயே அவன் தெரிந்துக் கொள்ளவேண்டும்.
அதற்கு என்ன வழி?
இதோ ராமகிருஷ்ணர் சொல்கிறார்:
“வீட்டு ஈயானது ஒரு சமயம் அழுகிய புண்ணின் மீதும், மறு சமயம் நிவேனத்துக்கு வைத்திருக்கும் பொருளின்மீதும் உட்காரும். ஆனால், தாமரையிலுள்ள தேனை அருந்தும் வண்டு, அதைத் தவிர வேறொன்றையும் மதியாது. நீ வீட்டு ஈயைப் போலிராமல் தேன் வண்டைப் போலிரு”. -பரமஹம்சரின் இந்த வாக்கு, இன்றைய இளைஞன் கடைபிடிக்க வேண்டிய அறிவியல் அரிச்சுவடி.
வாழ்க்கைப் பாதையில் நீண்ட தூரம் பயணம் செய்யவிருக்கும் இளைஞன் முதற்கோணல், முற்றும் கோணல் என்பதை நினைத்தே தன் படிப்பைத் தொடங்க வேண்டும்.
அந்தப் படிப்பையும் தேன் வண்டைப்போல் தேடிப் பிடித்துப் படிக்க வேண்டும்.