அவளது பிள்ளைக்குப் பாட்டன் வழியில் சொத்து வருகிறது.
மகன் சம்பாதிப்பது அவனது பேரனுக்குப் போகிறது.
ஆகவே, ஒவ்வொரு தலைமுறைக்கும் சொத்துப் பாதுகாப்பு இருக்கிறது.
இதிலே இன்னும் ஒரு கௌரவத்தை இந்து மகன் தாய்க்கு அளித்தான்.
அதாவது, தாயின் முன்னிலையில் மனைவியோடு பேசுவதில்லை.
இன்று காலம் மாறிவிட்டது.
சம்பிரதாயங்கள் மீறப்படுகின்றன.
தாயின் முன்னிலையில் மனைவியின்மீது கைபோடுவதுகூட வேடிக்கையாகி விட்டது.
போன தலைமுறை வரை நமது இந்து சமுதாயம் கண்டிப்பான சம்பிரதாயங்களை அனுஷ்டித்தது.
தாய் தகப்பன் விழித்துக் கொண்டிருக்கும் போது கணவனும் மனைவியும் தனியறைக்குள் செல்ல மாட்டார்கள்.
கணவன் பெயர் `சங்கரன்’ என்றிருந்தால் இதே சங்கரன் என்ற பெயரில் அவனுக்கொரு தம்பியோ வேலைக்காரனோ இருக்கலாம்.
அவனை, `டேய் சங்கரா?’ என்று அழைக்க நேரிடலாம்.
அது கணவனை அவமானப்படுத்துவதாக அமையலாம்.
ஆகவேதான், கணவன் பெயரைச் சொல்லக் கூடாது என்று வைத்தார்கள்.
பெண்ணுக்கு அடக்கம் போதிக்கப்பட்டது.
சத்தம் போட்டுச் சிரிப்பது இழிவான பெண்களின் குணம் என்று கருதப்பட்டது.
அதனால், `நகுதல் – நகைத்தல’ என்று மெல்லச் சிரிப்பதை, அது பெண்ணுக்கு வலியுறுத்தியது.
அந்தச் சிரிப்பையும் அவள், பிற ஆடவர் முன்னிலையில் சிரிக்கக் கூடாது.
காரணம், எவனாவது ஒரு ஆடவன் அந்தச் சிரிப்பைத் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடும்.
“பொம்பிளை சிரிச்சாப் போச்சு, புகையிலை விரிச்சாப் போச்சு” என்பது பழமொழி.
நேருக்கு நேராக அவள் யாரையும் பார்க்கக் கூடாது.
இந்தப் பார்வை, சிரிப்பு – இரண்டையும் ஒரு குறளில் சொன்னான் வள்ளுவன்.
யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.
ஆம், பாராத போது பார்க்கும், மெல்ல நகும். அவ்வளவுதான்.
காதல் உணர்ச்சியில் அவள் உடலில் எவ்வளவோ மாறுதல்கள் ஏற்படும்.
அவள் உள்ளம் கொதிக்கும். ஆனால், அப்போதும் அவள் ஊமையாகவே இருப்பாள்.
`நாணம்’ என்பது தமிழ்ச் சொல்தான்; என்றாலும், இமயமுதல் குமரிவரையிலே உள்ள இந்துப் பெண்களுக்கு அது பொதுச் சொல் ஆகும்.
இந்துக்கள் இந்த நாணத்தை மனப் பழக்கமாகத் தொடங்கி, உடற் பழக்கமாகவே ஆக்கிவிட்டார்கள்.
இந்துப் பெண்களுக்கு நாணம் சொல்லித் தெரியவேண்டிய கலையல்ல; அது அவள் ரத்தத்திலேயே ஊறியிருக்கிறது.
சாந்தி முகூர்த்தத்தன்று, மணமகளை இரண்டொரு மங்கல மங்கையர் அழைத்துக் கொண்டு போய் பள்ளியறையில் உட்கார வைக்கும் பழக்கம் இந்துக்களிடையே உண்டு. ஏனிந்தப் பழக்கம்?
காமத்தால் துடித்தும், நாணத்தால் நடக்க முடியாமலிருக்கும் அந்தப் பெண்ணை, நாலுபேர் நடத்திக் கொண்டு போவதாக ஐதீகம்.
இதைத் `தனியறை சேர்த்தல்’, `அமளியிற் சேர்த்தல்’ என்று இதிகாசங்களும் இலக்கியங்களும் கூறுகின்றன.
இவையனைத்தும் பலமான கட்டுக்காவற் சம்பிரதாயங்கள்.
இவற்றை மீறுவோர் உண்டு. தவறுவோர் உண்டு.
இவர்கள் சமுதாய அங்கவீனர்கள்.
இவர்கள் நற்குடிப் பிறவாதவர்கள்.
வள்ளுவன் தெளிவாகவே சொன்னான்.
நலத்தின்கண் நாரின்மை தோன்றின்
அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும், என்று.
`ஒருவன் அல்லது ஒருத்தியின் நடத்தை தவறாயின் அவர்களது குலமே சந்தேகத்திற்குரியது’ என்றான் வள்ளுவன்.
இன்னும் மணமாகாத இந்து இளைஞன், தனது சம்பிரதாயங்களின்படி அமையப்பெற்ற ஒரு பெண்ணோவியத்தைப் தேர்ந்தெடுத்தால், அவனது வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்.
நீண்ட நாள் கணவனைப் பிரிந்திருந்தாலும், நெறிமுறை பிறழாது, உலை மூச்சைப்போல அனல் மூச்சை ஜீரணித்து உப்பைக் குறைத்துச் சாப்பிட்டும், குளிர்ந்த நீராடியும் காம உணர்ச்சியே இல்லாமல் வாழும் ஓர் இந்துப் பெண் கிடைப்பதுபோல், கணவன் பெறக்கூடிய பெரும்பேறு வேறு எதுவுமே இல்லை.
கண்களையும் கவர்ச்சிகளையும் நம்பி, கட்டுப்பாடற்ற பெண்ணின் வலையில் விழுவோர் ஒன்று பைத்தியமாவார்கள்; அல்லது தற்கொலை செய்து கொள்வார்கள்.
இந்துச் சட்டங்கள் மட்டுமல்லாது, சம்பிரதாயங்களும்கூட, சகல வழிகளிலும் செம்மையான வாழ்க்கைக்கு உத்திரவாதம் அளிக்கின்றன.
வாழ்க்கை என்பது உடல் இச்சை மட்டுமன்று.
அதனையும் மீறிச் சில சுகங்களும் பெருமைகளும் உண்டு.
உடல் இச்சை மட்டும் மூல ஆதாரமாக இருந்து விட்டால், பெண்ணைத் தேர்வதில் இளைஞன் தவறி விழுவான்.
தாய்க்கும் தனக்கும், அடங்கிய பெண்ணுக்கு அழகு தேவையில்லை.
அவள் அழகில்லாதவளானாலும், அவளுக்குத் தெய்வமும் நிகரில்லை!