ஆவி உலகில் உலவுகிற சிலர், தங்களுக்குப் பிரியமானவர்களின் உடலில் புகுந்து கொண்டு, அவர்களையே மீடியமாக வைத்து, மற்றவர்களோடு பேசுகிறார்கள் என்பது உண்மை.
அண்மையில் ஒரு பத்திரிகையில் காங்கிரஸ் பிரமுகர் திரு.பி.ஜி. கருத்திருமன் அவர்கள் இதுபற்றி இரண்டொரு கட்டுரைகள் எழுதியிருந்தார்கள்.
இறந்து போனவர்களுடைய ஆவி தங்களுக்குப் பிரியமானவர்கள் உடலில் புகுந்து பேசுவதும் உண்டு. வேறு உடல்களை மீடியமாகக் கொண்டு பேசுவதும் உண்டு.
எனக்கே இதில் அனுபவம் உண்டு.
1941ஆம் ஆண்டு என் உடன் பிறந்த நாலாவது சகோதரி இறந்து போனார்.
அவருக்கு இரண்டு பெண்களும், ஒரு பையனும் உண்டு.
அந்தப் பெண்களில் மூத்த பெண்மீது, என் சகோதரியின் ஆவி வந்து பேசுவது உண்டு.
ஏதாவது முக்கியமான பிரச்சினைகளைப்பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போது என் சகோதரியின் ஆவி தன் மகள் உடம்பில் வந்து பேசும்.
அந்தப் பெண்ணுக்கு நான் மாமன்!
சாதாரண நேரங்களில் `மாமா’ என்றழைக்கின்ற அந்தப் பெண், ஆவி வந்து அழைக்கும்போது `தம்பி’ என்றழைக்கும்.
மற்ற உறவினரையும், என் சகோதரி எப்படி அழைப்பாரோ, அப்படியே அழைக்கும்.
மேலும், குரலும் என் சகோதரியின் குரலாகவே இருக்கும்.
இதை நான் பலமுறை கண்டிருக்கிறேன்.
ஆவி வந்து சொன்ன விஷயங்களெல்லாம் நடந்திருக்கின்றன.
இறந்து போனவர்களுக்குப் பிரியமான பதார்த்தங்களைச் செய்து நாம் படையல் நடத்துகிறோம் அல்லவா? அந்தப் பதார்த்தங்களை ஆவிகள் உண்ணுகின்றன என்பது ஐதீகம்!
தர்க்கத்திற்கு இது நிற்கமுடியாது என்று வாதிடுவோரும் உண்டு.
ஆனால் இறந்து போனவர்களுடைய ஆவி பற்றிய பல சம்பவங்களைத் தம் வாழ்நாளிலேயே கண்டிருக்கிறார் மதுரை ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞான சம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள்.
அவர் கூறியுள்ள சில அனுபவங்களை அப்படியே இங்கு எடுத்துக் கொடுப்பது வாசகர்களைச் சிந்திக்க வைக்கும்.
அவர் சொல்லியுள்ள பல விஷயங்களில் சிலவற்றை மட்டுமே நான் இங்கே தருகிறேன்.
1. இறந்தவர்கள் மீடியமாக இருப்பவர்களுக்குத் தெரியாத பாஷையில் அறிவித்தல்:
தூத்துக்குடியில் வருமான வரி ஆபீசராக இருந்த ஓர் இஸ்லாமியர், இறந்தவர்களோடு பேசுவதன் உண்மையை அறிய வேண்டும் என்று, எமது தம்பியார் வீட்டிற்கு வந்து இருந்தார். அவர் தாமும் பேசிப் பார்க்கவேண்டும்; ஆனால் தமிழைத் தாய் பாஷையாகக் கொண்ட மீடியம் மூலம், அந்த மீடியத்திற்குக் கொஞ்சமும் பழக்கமில்லாத பாஷையாகவும் தமது தாய் பாஷையாகவும் இருக்கும் உருது பாஷையில் கேள்வி கேட்டுப் பதிலும் உருது பாஷையில் வந்தால்தான், அது மீடியத்தில் ஏற்பட்ட பதில் அல்ல, இறந்தவருடைய வாக்கே என்று உறுதியாகக் கூற முடியுமென்று சொன்னார்.