எதை அனுபவிப்பது என்பதிலே பேதம் இருந்தாலும், ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்றின் மீது நாட்டம் இருக்கிறது.
தஞ்சாவூரிலே நிலம் வாங்கலாமா?, ஆர்க்காட்டுப் பக்கம் வளமான நிலம் கிடைக்குமா? என்று அலைகிறார்கள் பலர்.
`இந்த நாட்டை ஆள மாட்டோமா; அந்த நாட்டை ஆளமாட்டோமா?’ என்று தவிக்கிறார்கள் சிலர்.
-இவை மண்ணாசை.
எந்தப் பெண்ணைப் பார்த்தாலும், `இவள் தனக்குக் கிடைக்க மாட்டாளா?’ என்ற எண்ணம் சிலரது பிடரியில் வந்து உட்காருகிறது.
-இது பெண்ணாசை.
லட்சக்கணக்கில் பணம் இருந்தாலும், `இன்னும் ஒரு பத்து ரூபாய் கிடைக்கும்’ என்றால், சில மனிதர்கள் எந்த வேலையையும் செய்யத் துணிந்து விடுகிறார்கள்.
-இது பொன்னாசை.
எந்த மேடையில் தோன்றினாலும், `எல்லா மாலையும் தனக்கே விழ வேண்டும்,’ என்று சில மனிதர்கள் துடியாய்த் துடிக்கிறார்கள்.
-இது புகழாசை.
ஆசையை மூன்றாகத்தான் வகுத்தார்கள் நம்முடைய ஞானிகள்; காலம் அதை நான்காக ஆக்கி இருக்கிறது.
குழந்தை பிறக்கும்போது, அதற்கு எந்த ஆசையும் இல்லை.
அது தாயை அடையாளம் கண்டு கொள்ளவே பல நாட்களாகின்றன.
முதலில் அதற்குப் பசி மட்டும் எடுக்கிறது.
நாள் ஆக ஆகப் பாசம்தான் உருவாகிறது.
பிறகு ரொட்டி, மிட்டாய் மீது ஆசை வருகிறது.
தொடர்ந்து பொம்மைகள் மீது ஆசை வருகிறது.
பிறகு விளையாட்டிலே ஆசை.
பிறருக்கு ஆபத்தில்லாத இந்த ஆசைகள், இருபது வயதோடு முடிந்து விடுகின்றன.
அங்கிருந்து பெண்ணாசை ஆரம்பமாகிறது.
பெண் கிடைத்து விட்டால், பொன்னாசை தொடங்குகிறது.
பிள்ளைகள் இரண்டு பிறந்து விட்டால், மண்ணாசை வளர்ந்து விடுகிறது.
ஆனால், எந்தக் காலத்திலும், புகழாசை என்பது இருந்து கொண்டே இருக்கிறது.
ஒன்றைத் தொடர்ந்து ஒன்று என்று வளர்ந்து வரும் ஆசைகளில் விழுந்து, விழுந்து மனிதன் கரையேற முடியாமல் தவிக்கிறான்.
`போதுமே இந்த வாழ்வு’ என்று ஒருநாள் அவனுக்குத் தோன்றுகிறது.
அற்புதமான சாப்பாடும், அடுத்தொரு பெண்ணும் அவனுக்குக் கிடைத்து விட்டால், `இந்தச் சுகத்தை விட்டு விடுவதா’ என்ற நினைப்பு வந்து விடுகிறது.
கீதையில் சொல்லப்படுகின்ற சத்துவ, ரஜோ, தமோ என்ற மூன்று குணங்களிலே இது நடுக்
குணம்.
ரஜோ குணம் படைத்த ஒருவன், இவ்வளவு ஆசைகளிலும் மூழ்கித் திளைக்கிறான்.
இவனைத்தான் `ராஜா’ என்கிறோம்.
இந்த ராஜாக்கள் திடீரென்று `தமோ’ என்னும் தாமஸ குணத்தில் தள்ளப்படுகிறார்கள்.
சிலர் சாத்விக குணத்துக்குத் தங்களைப் பக்குவப்படுத்திக் கொள்வார்கள்.
ஆனால், பெரும்பாலும், ரஜோ தமோவுக்கும், தமோ ரஜோவுக்கும் தள்ளப்படுவது வழக்கம்.
உலகத்தில் ஆனந்தமாக அனுபவித்த போகிகளின் வரலாற்றை முதலில் கவனிப்போம்.
புகழ் பெற்ற ரோமாபுரியை நீங்கள் அறிவீர்கள்.
ஆடை உடுத்த நேரமில்லாமல் அனுபவித்தார்கள் அந்நாட்டு மன்னர்கள்.
மன்னர்கள் மட்டுமா?
மகாராணிகள் கதை என்ன?
ஆடவர்கள் புதுப்புது பெண்களுக்கு ஆள் அனுப்புவது போல், புதுப்புது ஆடவர்களுக்கு ஆள் அனுப்பியவர்கள் அந்நாட்டுப் பெண்கள்.
பாலுணர்ச்சி வரைமுறை இல்லாமல் போயிருந்த மண்டலங்களிலே அதுவும் ஒன்று.
உணவு முறையிலே இன்னின்ன பொருள்களைத் தான் சாப்பிடலாம் என்ற விவஸ்தையும் அங்கே இருந்ததில்லை.
கோழி இறைச்சியிலிருந்து, குதிரை இறைச்சி வரை உண்டு தீர்ப்பதே உற்சாகம் என்று கருதப்பட்டது.
இது உஷ்ணம்; இது சீதளம்; இது வாயு என்றெல்லாம் பார்த்து உயிரை விடுகிறோமே நாம்; இவற்றில் எதையுமே பாராத பூமி அது.
நமக்கோ திருமூலரின் `திருமந்திரம்’ உடம்பைப் பற்றிப் பேசுகிறது.
சித்தர் பாடல்கள் உடம்பைப் பற்றிப் பேசுகின்றன.
இந்து வேதங்கள் அளவறிந்து செயல்படுவதைக் குறிக்கின்றன.
பற்றற்ற வாழ்க்கையையே ஒவ்வொன்றும் எடுத்து விளக்குகின்றன.
ஆனாலும் கூட, நம்முடைய மூதாதையர்களும் நாமும் ரோமானியர்களுக்குச் சளைத்தவர்களாக இல்லை.
கரிகாற் சோழன் ஒரு பெரிய ஆட்டுத் தொடையைத் தின்று விட்டு, குத்தீட்டியால் பல் குத்துவானாம்!
சோழன் என்ன சோழன்! நவீன சோழர்கள் அரைக் கோழியைக் கையிலே தூக்கிக் கொண்டு கடித்து இழுப்பதைப் பார்த்தால், `இது என்ன பல்லா, பாறையா?’ என்று கேட்கத் தோன்றும்.
இந்துக் குடும்பங்களில் உணவு முறையில் ஒரு ஆரோக்கியம் உண்டு.
சூடான பதார்த்தத்தில் குளிர்ச்சியான பொருளைப் போடக்கூடாது.
சூட்டுக்குச் சூடுதான் குளிர்ச்சி.
கழுத்து வரை தண்ணீரில் குளித்தால், உடம்பில் இருக்கிற உஷ்ணமும் சிரசுக்கு ஏறுகிறது.
உடம்பு முழுக்கக் குளித்த பிறகு தலையை நனைத்தால் மொத்த உஷ்ணமும் விலகி விடுகிறது.
எனக்கிருக்கும் ஒரே கோளாறு; உஷ்ணக் கோளாறு.
நவீன டாக்டர்கள், `அப்படிப்பட்ட கோளாறே உலகத்தில் இல்லை’ என்று வாதிக்கிறார்கள். இதைவிட மடத்தனம் வேறு இருக்க முடியாது.
கொளுத்தும் வெயிலில் இருநூறு மைல் தூர பயணம் செய்துவிட்டு, அந்த அலுப்பில் எட்டுக் குவளை தண்ணீர் குடிக்கிறோம்; ஒரு துளி நீர் கூட வெளியே வருவதில்லை.
அதே நேரத்தில் உடம்பில் ஏறியுள்ள உஷ்ணத்தின் மீது மற்றொரு உஷ்ணம் படட்டும்; அதாவது வயிற்றுக்குள்ளே ஒரு குவளை வெந்நீரை ஊற்றிப் பாருங்கள். சூட்டுக்குச் சூடு குளிர்ச்சியாகிச் சிறுநீர் பிரியத் தொடங்கும்.
இந்த மருத்துவ முறைகள் நமக்கு இரண்டாயிரம் ஆண்டுகாலமாகவே உள்ளவை.
இவை இருக்கின்றன என்ற தைரியத்தால் தான் நம்முடைய மூதாதையர் வாழ்க்கையைச் சுகமாக அனுபவித்தார்கள்.
ஆனால், பெரும்பாலோர் அளந்து அனுபவித்தார்கள்.
இப்போது சிலபேர் சொல்வதைக் கேட்கிறேன்.
`என் பாட்டிக்கு நூற்று மூன்று வயது!’ என்கிறார் ஒருவர்.
`என் அப்பாவுக்கு நூறு வயது!’ என்கிறார் ஒருவர்.
`எனக்கு எண்பத்திரண்டு வயதாகிறது; இன்னும் ஒரு மாத்திரை கூடச் சாப்பிட்டதில்லை’ என்கிறார் இன்னொருவர்.
நாகரிகம் மிகுந்த நம்முள் சிலரோ, ஐம்பது வயதில் ஒரு மருந்து அலமாரியையே தூக்கிக் கொண்டு அலைகிறோம்.
காரணம், போகத்தை அனுபவிக்கும் முறையிலுள்ள பேதமே.
`மாதர் போகம் மாதம் இருமுறை’ என்பது கிராமத்துப் பழமொழி.
கணவனும் மனைவியும் தாங்கள் கலந்த தேதியை நினைவில் வைத்துக் கொண்டே இருப்பார்கள்.
பச்சையாக ஒரு பழமொழி உண்டு, `விந்து விட்டவன் நொந்து கெட்டான்’ என்று.
`பதினான்கு நாள் சேமிப்பு. பதினைந்தாவது நாள் செலவு’ என்றிருந்த காரணத்தால், அவர்கள் இரவும் நன்றாக இருந்தது; உறவும் நன்றாக இருந்தது; உடலும் நன்றாக இருந்தது.
மருத்துவ வசதி மிகக் குறைவாக இருந்த காலங்களில், மருத்துவம், இல்லாமலேயே நம்முடைய மூதாதையர் நன்றாக வாழ்ந்தார்கள்.
தங்கள் செயலால் அவர்கள் நோய் தேடிக் கொண்டது இல்லை.
கர்ம வினையாலோ, கடவுளின் தண்டனையாலோ மருத்துவத்தால் தீர்க்க முடியாத நோய்கள் சிலருக்குத் தோன்றி இருக்கின்றன.
தாமாக நோய் தேடிக் கொண்டவர்கள், மருந்தில்லாமல் செத்ததையும் நான் அறிவேன்.
எனக்குத் தெரிந்த இரண்டு இளைஞர்கள் அடிக்கடி தாசி வீடு செல்வார்கள். அவர்களுக்கு `மேக நோய்கள்’ தோன்றின.
நவீன மருத்துவத்தில் அந்த நோய்களெல்லாம் இல்லாமலேயே இன்று ஒழிந்து விட்டன.
அரையாப்பு, வெட்டை, கிரந்திப் புண் எனும் நோய்களே அவை.
அதில் அவர்கள் பட்டபாடு, அப்பப்பா!
மகாகவி பாரதி பாடினானே, `தாளம் படுமோ தறிபடுமோ’ என்று; அந்தப்பாடு!
ஒருவர் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு சென்னை நகர விடுதியில் காலமானார்; இன்னொருவர் கோவையில் வேலை பார்த்த இடத்தில் காலமானார்; முப்பது வயதைத் தாண்டாமலேயே இருவரும் காலமாகி விட்டார்கள்.