`ஐம்பது வயதுக்கு மேல் நான் ஒரு சாமியாராகவோ அல்லது, அந்தக் குணங்கள் கொண்டவனாகவோ மாறிவிடுவேன்’ என்று குறிப்பிட்டதே அது.
அப்படி ஒருவர் குறிப்பிட்டபோது எனக்கு வயது இருபத்து ஒன்று. இப்போது ஐம்பதைக் கடந்துவிட்டேன். இந்த முப்பது ஆண்டுக் காலமும் அவர் சொன்னது போலவேதான் வாழ்க்கை ஓடியிருக்கிறது. இப்போது மனோபாவம் மட்டுமின்றி, உணவு முறை கூட சாமியார் முறையாகி இருக்கிறது.
எந்தெந்தக் காரியங்களை நான் பிரியத்தோடு செய்வேனோ, அதையெல்லாம் இறைவன் வெறுக்க வைத்திருக்கிறான். எவ்வெவற்றை நான் விரும்ப மாட்டேனோ, அவற்றையெல்லாம் ஏற்றுக் கொள்ளும்படி கட்டளை இட்டிருக்கிறான். உணவில் ஒவ்வொரு பொருளாக வெறுக்க வைக்கிறான். ஆனால், சிந்தனையில் நிதானத்தை ஏற்படுத்தியிருக்கிறான்.
எனக்கு எதிர்காலம் சொன்னவர், என் கைரேகைகளை மட்டும் தான் பார்த்துச் சொன்னார். ரேகை, ஜோசியம், ஜாதகம்-இவை சரியாகப் பார்க்கப்படுமானால், விஞ்ஞானம் உலகத்தைக் கணிப்பது போலவே இவை வாழ்க்கையைக் கணித்து விடும்.
இறைவனுடைய படைப்பில் ஒரு கன்றுக்குட்டிக்கும் கூட ஜாதகம் இருக்கிறது. கன்றுக்குட்டி என்ன, கடவுளுக்கே கூட ஜாதகம் இருக்கிறது. திருப்பதியில் நிற்கும் பெருமாள்தான் அழகர் கோயிலிலும் நிற்கிறார்.
ஆனால், திருப்பதி சமஸ்தானாதிபதி கோடீஸ்வரராகத் திகழ்கிறார்; அழகர் கோயிலில் பெருமாள் அன்றாடம் தடுமாறுகிறார். இத்தனைக்கும் காலத்தால் திருப்பதிக்கு முந்தியது அழகர் மலை என்று கருதப்படுகிறது.
கட்டியவன் ஜாதகம் எப்படியோ யார் கண்டது?
எனக்குத் தெரிந்த நல்ல குடும்பத்திலே பிறந்த அழகான பெண்ணொருத்தி, வசதி இல்லாத ஒரு அரைப்பைத்தியத்தை மணந்து கொண்டு, இட்லி சுட்டு வியாபாரம் செய்கிறாள். பார்த்தால் பொத பொதவென்று இருப்பாள் ஒருத்தி. வீதியில் போகும் விலங்குகள் கூட அவளை ஏறெடுத்துப் பார்க்க மாட்டா; அவளுக்கு லட்சாதிபதி வீடு; அழகான மாப்பிள்ளை கிடைத்து விட்டது.
கோயிலுக்கு ஜாதகம் இருக்கிறது. குருக்களுக்கு ஜாதகம் இருக்கிறது. கோயில் கட்டியவனுக்கும் ஜாதகம் இருக்கிறது. ஸ்ரீராமனுடைய ஜாதகத்திலும், பெண்டாட்டியைப் பறிகொடுக்கும் கட்டம் இருக்கிறது. சீதை பிறக்கும்போதே அவள் கை ரேகையில், அவள் காட்டுக்குப் போவாள் என்றிருக்கிறது.
ஒரு காரியம் நடைபெறுகிறது என்றால், அதற்கு நாம் காரணமில்லை என்றால், ஏதோ நமக்குத் தெரியாத ஒரு சக்தி தானே காரணம்?
தேர்தல் நடத்துவதும் நடத்தாததும் ஒருவர் கையில் இருந்த போது, அவர் தேர்தல் நடத்துவானேன்? தோல்வியுற்று அவதிப்படுவானேன்?
பெரிய பெரிய சாமர்த்தியசாலிகளையெல்லாம் ஜாதகம் பிடரியைப் பிடித்துத் தள்ளுகிறது.
இந்தியாவுக்குச் சுதந்திரம் வந்த அதே நேரத்தில் பாகிஸ்தானும் பிரிந்தது.
பாகிஸ்தான் ஜாதகத்தில் ராணுவ ஆட்சி என்றும், இந்தியாவின் ஜாதகத்தில் கலப்படம், குழப்பம் என்றும் இறைவன் அப்பொழுதே எழுதி வைத்திருக்கிறான்.
நினைக்காத ஒன்று நடக்கும்போது அதுவே ஜாதகப் பலன் என்றாகி விடுகிறது.
இது மாதிரி விஷயங்களில் இந்துக்களின் நம்பிக்கை எவ்வளவு அர்த்த புஷ்டி வாய்ந்தது என்பதைக் காண முடிகிறது.