சுவாமிகள் உரைத்த மொழி, என்னை ஆத்திரக்காரனாக்கவில்லை; சிந்தனையாளனாக்கிற்று.
அரண்மனைக்குச் சென்றேன். இளங்காற்றுத் தாலாட்டும் மேன்மாடத்தில் உலாத்தினேன்.
`எந்தப் பெண்ணுக்கும் இரண்டு மனம்; சக்தி தத்துவத்தைக் கூட அது விட்டதில்லையாமே!’
நான் அப்படி நினைக்கவில்லை.
எனது பட்டத்து ராணி ஒரு தெய்வத் திருமகள். அவளுக்கு ஒரே மனம். அது முற்றிலும் என் மீதே!
இரவுக்கு ஒரே நிலவு; பகலுக்கு ஒரே ஆதவன்.
எனக்கு அவள்; அவளுக்கு நான்!
நிலா முற்றத்துச் சாய்வு மஞ்சத்தில் அமர்ந்தேன்.
காற்சலங்கை ஒலி கேட்டது. அது என் தேவதை வரும் அறிவிப்பு!
தோள் தொட்டது தென்றல்; அது அவளது கைவிரல்!
பாடிற்று ஒரு குயில்; அது அவள் பேசிய மொழி.
மெதுவாகத் திரும்பிப் பார்த்தேன். அவள் முகத்தையே உற்று நோக்கினேன்.
களங்கம் நீங்கிய பூரண சந்திரனாயிற்றே இது! இதற்கா களங்கம்? நான் நம்ப மாட்டேன்.
`பிரபு’ என்றாள் ராணி.
`தேவி!’ என்றேன்.
`சிருங்கார சதகம் பாடும் நேரத்தில், சிந்தனைக்கு வேலை என்ன?’ என்றாள்.
`சிருங்காரலயத்தில், சோகம் இழைவது உண்டா?’ என்றேன்.
`மன மயக்கம் காதல்; மதி மயக்கம் சோகம்’ என்றாள் அவள்.
`என் மதி மயங்குகிறது!’ என்றேன்.
அவள் தனது மெல்லிய பஞ்சு போன்ற இதழ்களால் என் இதழ்களில் முத்தமிட்டாள்.
என் மதி மயக்கம் நீங்கி, மன மயக்கம் அதிகரித்து விட்டது.
எனது தேவி பாரம்பரிய ராஜகுமாரி அல்ல. தாய் ஒரு நாடு; தந்தை ஒரு நாடு; அவர்கள் வாழ்ந்தது உஜ்ஜைனி. பத்து வயது முதல் நான் அவளை அறிவேன். பதினாறாவது வயதில் மணம் முடித்தேன்.
சிருங்காரத்தைப் பற்றி எனக்குச் சில விஷயங்கள் தெரியும்.
ஒரு பெண் சுகமானவளா இல்லையா என்பதை, அவளை ஸ்பரிசிக்கும் போதே நான் கண்டு கொள்வேன்.
முதல் நாளிலேயே அவளை நான் தீண்டிய போது என்னை மெய்மறக்கச் செய்தது.
பல பெண்ணைச் சந்தித்த ஒருவன்தான் சரியான பெண்ணை அடையாளம் கண்டு கொள்ள முடியும்.
வகை வகையான பெண்ணை ரசித்தது உண்டு. ஆனால், இவ்வளவு மகிழ்ச்சியை எவளிடமும் பெற்றதில்லை. அதனால் இவளை `ராஜ மோகினி’ என்று அழைப்பது பழக்கம்.
அவள் என்னை முத்தமிட்டதும், தெள்ளிய தடாகத்தில் சுவாமிகள் கிளப்பிவிட்டிருந்த அலை ஓய்ந்து விட்டது.
நான் அவளது கழுத்தில் முத்தமிட்டேன்.
பழங்கதையானதால், பச்சையாகச் சொல்கிறேன். அவளது கன்னத்தை என் உதட்டுக்குள் இழுத்துக் கொண்டேன்.
`என் தெய்வமே…’ என்றாள்.
மதுவினை ஊற்றிக் கொடுத்தாள். அதிகம் பருகினேன். பருகப்பருக அவளது பிணைப்பு அதிகமாயிற்று. பிறகென்ன உள்ளத்து ரகசியம் வெளிவரத் தொடங்கியது.
`உனக்கு இரண்டு மனம் என்று ஒரு ஆண்டி சொன்னான்’ என்றேன்.
`யாரவன்?’ என்றாள். அழுதாள்; அரற்றினாள்.